நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

கோலிவுட் திரை உலகில் ரசிகர்களால் அன்போடு தல என்று அழைக்கப்பட்டு வரும் பிரபல முன்னணி நடிகர் தான் தல அஜித் குமார். இவர் தற்போது வலிமை திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் “துணிவு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியர் நடிக்க பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் போஸ்டர்கள் அண்மையில் வெளியாகி வைரலானது.

போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது. 55 நாட்களுக்கு மேல் நடந்த முதல் கட்ட படப்பிடிப்பில் பெரும்பாலான காட்சிகளை படமாக்கி முடித்தனர். அதன் பிறகு படத்திற்கான படத்தொகுப்பு வேலைகள் நடைபெற்று வந்த நிலையில் நடிகர் அஜித்குமார் தனது நண்பர்களுடன் இணைந்து பைக்கில் சுற்றுலா சென்றிருந்தார். அதையடுத்து மீண்டும் சென்னை திரும்பிய நடிகர் அஜித்குமார் மீண்டும் துணிவு திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

இந்நிலையில் இப்படத்திற்கான இறுதி கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் கடந்த 18 நாட்களாக நடைபெற்று வந்தது. தற்போது துணிவு திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் தாய்லாந்து நாட்டில் நிறைவு பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியிட தயாரிப்பாளர் போனி கபூர் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதனால் படத்தின் இறுதி கட்டப் பணிகளை விரைவில் முடிக்கவும் படக் குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர். இந்த தகவலால் அஜித் ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.