மலையாள இயக்குனரான சச்சி அவர்கள் இயக்கிய படத்தில் நடிக்க ஆசைப்பட்ட அஜித்தின் ஆசை நிறைவேறாமல் போனதை பற்றி இயக்குனரின் மனைவி வருத்தத்துடன் பேட்டியில் கூறியுள்ளார்.

ரசிகர்களால் அன்போடு தல என்று அழைக்கப்படும் நடிகர் தான் அஜித் குமார். இவர் வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது வினோத் இயக்கத்தில் AK61 என்ற படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு ரசிகர்கள் எப்பொழுதும் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருவார்கள். அதனால் அஜித்தும் அதற்கேற்றார் போல் நல்ல கதைகளாக தேர்வு செய்து கவனமாக நடித்து வருகிறார்.

அவ்வாறு மலையாளத்தில் வெளியான ஒரு படத்தை பார்த்து வியந்து போன அஜித் அந்த இயக்குனருக்கு போன் செய்து நாம் ஒரு படம் இணைந்து பண்ணலாமா என்று கூறியுள்ளார். அதாவது 2020 ஆம் ஆண்டில் “ஐயப்பனும் கோஷியும்” என்ற திரைப்படம் மலையாளத்தில் வெளியானது. இப்படத்தை இயக்குனர் சச்சிதானந்தம் எழுதி, இயக்கியிருந்தார். இவரை திரைத்துறையில் அனைவரும் சச்சி என்று அழைப்பார்கள். இவரது அய்யப்பனும் கோஷியும் படத்தில் பிரித்விராஜ், பிஜூ மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

இந்தப்படம் கேரளாவை தாண்டி தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழி ரசிகர்கள் மத்தியிலும் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்தப் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்துள்ளனர். அதில் ராணா மற்றும் பவன் கல்யாண் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் அறிவிக்கப்பட்ட தேசிய விருதில் இப்படத்திற்கு நான்கு பிரிவுகளில் விருது கிடைத்தது.

ஆனால் இயக்குனர் சச்சி 2020 ஆம் ஆண்டு தனது 48வது வயதில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது மனைவி ஒரு வார இதழுக்கு பேட்டி கொடுத்திருந்தார். அப்பொழுது தல அஜித் குமார் இப்படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் சச்சிக்கு போன் செய்து பேசியது பற்றி பகிர்ந்திருக்கிறார். அதில் அஜித் அவர்கள் சச்சியிடம் இந்த படம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது, உங்களுடன் ஒரு படம் இணைந்து பண்ண வேண்டும் என கூறியுள்ளார். அதுமட்டுமின்றி இதைப்பற்றி பேச கொச்சி வரட்டுமா என அஜித் கேட்டுள்ளார்.

ஆனால் அப்போது சிகிச்சை பெற்றுவந்த சச்சி, ஆபரேஷன் முடிந்த பிறகு நானே சென்னையில் வந்து பார்க்கிறேன் என அஜித்திடம் சொல்லி உள்ளார். அதற்குள்ளாகவே சச்சி மறைந்ததால் இந்த சந்திப்பு நடக்காமலேயே போய்விட்டது. அதன் பிறகுதான் அவருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. என்ற விஷயங்களை சச்சி அவர்களின் மனைவி வருத்தத்துடன் கூறியுள்ளார். இந்த வருத்தமான தகவல் தற்போது வைரலாகி வருகிறது.