நடிகை கீர்த்தி சுரேஷ் ரகு தாத்தா திரைப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார்.

தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத டாப் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருக்கும் இவரது நடிப்பில் தெலுங்கில் சமீபத்தில் வெளியான தசரா திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று வந்தது.

இதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் தமிழில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி இருக்கும் மாமன்னன் திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் இயக்குனர் சுமன் குமார் எழுதி இயக்கியிருக்கும் “ரகு தாத்தா” என்னும் திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இப்படத்தை கே.ஜி.எஃப்., காந்தாரா உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்து பிரபலமான ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் தொடர்பான அறிவிப்பை படகுழு ஏற்கனவே வெளியிட்டு இருந்த நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ரகு தாத்தா திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. இதனை படக்குழுவினர் கேக் வெட்டி செலபரேட் செய்துள்ளனர். அதில் மகிழ்ச்சியுடன் இருக்கும் கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் ட்ரெண்டிங்காகி வருகிறது.