சர்தார் திரைப்படத்தின் முதல் பாடலை நடிகர் கார்த்தி பாடியுள்ளார். இது குறித்த புகைப்படத்தை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி நடிப்பில் அடுத்ததாக திரைக்குவர தயாராக இருக்கும் திரைப்படம் தான் “சர்தார்”. இப்படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார். இப்படத்தில் மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகர் சங்கி பாண்டே நடிக்க ராஷிகண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படம் அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகை அன்று வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தை ஈர்த்து 7.6 மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூடியூபில் முதலிடம் பிடித்துள்ளது.

இந்நிலையில் சர்தார் திரைப்படம் குறித்த புதிய அப்டேட்டை ஜிவி பிரகாஷ் குமார் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், ‘சர்தார்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘ஏறுமயிலேறி’ என்ற நாட்டுப்புற பாடலை நடிகர் கார்த்தி பாடியுள்ளார். என்ற தகவலை புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார். அது தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.