Hansika in two roles in Gandhari movie
Hansika in two roles in Gandhari movie

தயாரிப்பாளர் தனஞ்செயன் திரைக்கதையில் ஆர்.கண்ணன் இயக்கத்தில் ‘காந்தாரி’யாக மிரட்டும் ஹன்ஷிகா

தமிழ் சினிமாவில் மினிமம் கியாரண்டி வெற்றிப்பட இயக்குநர் இயக்குநர் ஆர்.கண்ணன்.
மணிரத்னத்திடம் உதவியாளராக பணியாற்றி, ‘ஜெயம்கொண்டான்’ படத்தின் மூலம் வெற்றிகர இயக்குநராக ஆரம்பித்து தயாரிப்பாளராகவும் மாறிய ஆர்.கண்ணன் தற்போது ஹன்சிகா மோத்வானி நாயகியாக நடித்துள்ள ‘காந்தாரி’ படத்தை இயக்கி தனது மசாலா பிக்ஸ் சார்பில் தயாரித்து இருக்கிறார்.

எமோஷனல் ஹாரர் திரில்லர் ஆக உருவாகியுள்ள இந்தப்படத்திற்கு தொல்காப்பியனின் கதையை எடுத்துக்கொண்டு அதில் பல கமர்ஷியல் அம்சங்களை சேர்த்து திரைக்கதை எழுதியுள்ளார் ஆர்.கண்ணனின் நண்பரும் தயாரிப்பாளருமான தனஞ்செயன். பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவை மேற்கொள்ள எல்.வி.முத்து கணேஷ் இசை அமைக்கிறார்கள். தற்போது ஹன்சிகாவின் வித்தியாசமான தோற்றத்துடன் இந்தப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதை தொடர்ந்து காந்தாரி படத்தின் அறிமுக நிகழ்வு நடைபெற்றது.

இதில், படத்தின் கதாசிரியரான தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசும்போது,

“கண்டேன் காதலை படத்தில் ஆரம்பித்து கண்டேன் கண்ணனை என அவருடனான நட்பு 15 வருடங்களாக தொடர்கிறது. இந்த படத்தின் கதையை தொல்காப்பியன் என்னிடம் கொடுத்தார். நானும் எனது குழுவினரும் இந்த கதையை படித்தபோது இது சினிமாவிற்கு ஒன்றும் செட் ஆகிற மாதிரி இல்லையே, இதை எப்படி பண்ணுவது என யோசித்தேன். மூன்று மாதம் கழித்து தொல்காப்பியனை அழைத்து இது எனக்கு செட் ஆகாது என்று கூறினேன். மீண்டும் ஒருமுறை என்னை பார்க்க வந்த தொல்காப்பியன் எனக்கு 50 வயது ஆகிவிட்டது. என் பெயர் சினிமாவில் வரவேண்டும். இந்த கதையில் ஏதோ ஒரு அழுத்தமான எமோஷன் இருக்கிறது.. இதை நீங்கள் உங்கள் பாணியில் எப்படியாவது டெவலப் செய்து சினிமாவாக கொண்டு வர முயற்சி செய்யுங்கள் எனக் கூறினார். அவரது சினிமா குறித்த ஆர்வம் கண்டு வியந்து போய் அந்த கதையை மீண்டும் அலசினோம்.

அந்த மொத்த கதையில் நரிக்குறவர் வாழ்க்கை முறை பற்றி சொல்லப்பட்டிருந்த விஷயம் என்னை கவர்ந்தது. அவர்கள் வாழ்க்கையை ஏன் படமாக எடுக்க கூடாது என்கிற எண்ணம் முதலில் ஏற்பட்டது. அடுத்ததாக இந்த கதாபாத்திரத்தையே இரட்டை வேடத்தில் நடிக்க வைத்தால் என்ன என்கிற எண்ணமும் தோன்றியது. அதன் பிறகு நானும் எனது குழுவில் உள்ள சீனி செல்வராஜும் சேர்ந்து இந்த படத்திற்கு புதிய திரைக்கதையை உருவாக்கினோம். இந்த படத்தின் வசனங்களை சீனி செல்வராஜும் நானும் எழுதினோம். இதற்காக நரிக்குறவர் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று அவர்கள் பேசும் வசனங்களை ஒலிப்பதிவு செய்து, எங்களது படத்தில் நாங்கள் எழுதிய வசனங்களுக்கு அவர்கள் பேசியது எது பொருத்தமாக இருக்கும் என்பது வரை அவர்களிடம் கேட்டு ஆய்வு செய்து வசனங்களை எழுதினோம்.

ஆனால் இந்த படத்தின் ஸ்கிரிப்ட்டை எழுதி முடித்தது இயக்குநர் கண்ணனுக்காக அல்ல. இதை எழுதி முடித்ததும் ஒரு பெரிய நடிகை நடித்தால் நன்றாக இருக்கும் என நயன்தாரா அல்லது திரிஷா இவர்களை நடிக்க வைக்கலாமா என்கிற பேச்சு எழுந்தது. அதற்கான முயற்சியை ஆரம்பிக்கும் போது தான் எதிர்பாராத விதமாக இயக்குநர் ஆர்.கண்ணன் எங்களை தொடர்பு கொண்டு ஹன்சிகாவின் தேதி எனக்கு கிடைத்திருக்கிறது.. ஆனால் என்னிடம் இருக்கும் கதை அவருக்கு செட் ஆகவில்லை.. அவருக்கு ஒரு கதை தேவைப்படுகிறது.. உங்களிடம் கதை ஏதாவது தயாராக இருக்கிறதா என்று கேட்டார்..

என்னிடம் இருக்கும் கதையை அவரிடம் சொல்ல ஆரம்பித்தபோது 15 வது நிமிடத்திலேயே கதை சூப்பராக இருக்கிறது.. என்னிடம் நீங்கள் இனி சொல்ல வேண்டாம்.. வாருங்கள் நேரடியாக ஹன்சிகாவிடமே சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டார். உடனடியாக மும்பை சென்று ஹன்சிகாவை சந்தித்தோம். நான் தான் கதாசிரியர் என்றதும் அவர் ஆச்சரியப்பட்டு போனார். அவரிடம் 2:30 மணி நேரம் கதை சொன்னோம். ஆனாலும் மிகப் பிரமாண்டமான கதை, மிகப்பெரிய பட்ஜெட் தேவைப்படுமே.. இதை இயக்குனர் கண்ணனால் கையாள முடியுமா என்கிற கேள்வியையும் எழுப்பினார் ஹன்ஷிகா. ஆனால் கண்ணனோ எந்த தயக்கமும் இன்றி இந்த படத்தை நான் பிரமாண்டமாக எடுத்து விடுவேன் என கூறினார்.

பின்பு படப்பிடிப்பு ஆரம்பமானது. அந்த சமயத்தில் அவர் திருமணம் செய்துகொள்ள இருந்ததால் சில காட்சிகளில் அவர் நடிக்க முடியாது என்று சொல்ல, அதை மனதில் கொண்டு கிட்டத்தட்ட 18 காட்சிகளில் நானும் சீனியும் மாற்றங்கள் செய்தோம். அதன் பிறகு மொத்த படக்குழுவினரையும் அமர வைத்து முழு கதையையும் வசனங்களுடன் அவர்களுக்கு படித்துக் காட்டினேன். படபிடிப்பின் போது இயக்குநர் கண்ணன், தனக்கு தோன்றிய சில மாற்றங்களை செய்து படத்தை இயக்கினார். அது அவரது சுதந்திரம்.. அதேசமயம் இந்த படத்தில் டைட்டிலை மாற்றலாம் என அவர் கூறியபோது நாங்கள் காந்தாரியே இருக்கட்டும் என காரணங்களுடன் கூறியதும் உடனே ஒப்புக்கொண்டார்.. அந்த வகையில் ஒரு கமர்சியல் பொழுதுபோக்கு படத்தை கண்ணன் கொடுத்திருக்கிறார் என நான் நம்புகிறேன்.

இந்த படத்திற்கு இவ்வளவு தரமான இசை கிடைத்ததற்கு காரணம் இசையமைப்பாளர்கள் எல்.வி.முத்து கணேஷ். இசை மூலமாக ஒரு கதையை இந்த அளவிற்கு உயர்த்த முடியுமா என ஆச்சரியப்பட வைக்கும் அளவிற்கு பிரமாதப்படுத்தி இருக்கிறார். இந்த படம் அவர்களுக்கு நிச்சயம் பெயர் வாங்கிக் கொடுக்கும் படமாக அமையும். ஒரு எமோஷனல் ஹாரர் திரில்லர் ஆக இந்த படம் இருக்கும். கண்ணனுக்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என வாழ்த்துகிறேன். இந்தப் படத்திற்கு காந்தாரி இரண்டாம் பாகமும் இருக்கிறது. படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து கதையை கொடுக்கிறோம் என கண்ணனிடம் கூறியுள்ளேன்” என்று கூறினார்.

இயக்குனர் சுசீந்திரன் பேசும்போது,

“இயக்குனர் கண்ணன் மணிரத்னம் சாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய சமயத்தில் இருந்து எனக்கு பழக்கம். ஒரு இயக்குனநராக ஒரு கதையை மிகச் சிறப்பாக கொடுக்கக்கூடிய இயக்குநர். கண்டேன் காதலை, இவன் தந்திரன் படங்களைத் தொடர்ந்து இவர்களது கூட்டணியில் இந்த படமும் மிகப்பெரிய வெற்றி பெறும். கண்ணன் சினிமாவை அதிகம் நேசிக்கக் கூடிய இயக்குநர். சினிமாவைத் தவிர அவருக்கு வேறு எதுவும் தெரியாது. சினிமா விஷயத்தில் கண்ணனை விட தனஞ்செயன் இன்னும் ஆர்வம் கொண்டவர். அவரிடம் இருந்து இன்னும் பல நல்ல கதைகள் வரவேண்டும்.. முன்பு போல இப்பொழுது கதாசிரியர்கள் பெரிய அளவில் தமிழ் சினிமாவில் இல்லை. பஞ்சு அருணாசலம், ஆர்.செல்வராஜ் போன்ற கதாசிரியர்கள் இருந்தபோது ஒரு இயக்குனர் கண்ணை மூடிக்கொண்டு நம்பி கதையை வாங்கிச் சென்று வருடத்திற்கு ஆறு படங்களை இயக்கிய காலமும் உண்டு. அந்த வகையில் ஒரு கதாசிரியராக தனஞ்செயன் பல இயக்குனர்களுக்கு உதவ வேண்டும்” என்று கூறினார்.

படத்தின் பைனான்சியர் பிரவீன் பேசும்போது,

“நீங்கள் இந்த படம் பார்க்கும்போது இடைவேளைக்குப்பின் இவர்தானா ஹன்சிகா மோத்வானி என ஆச்சரியப்பட்டு போவீர்கள். அந்த அளவுக்கு அர்ப்பணிப்புடன் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார்” என்றார்

ஈஸ்வரன் பேசும்போது,

“நான் கட்டுமான நிறுவனம் நடத்தி பல வில்லாக்களை கட்டி வருகிறேன். அப்படி என்னுடைய வீட்டிற்கு ஒரு முறை வந்த ஆர்.கண்ணன் என்னுடைய மனம் போலவே வீடும் அழகாக பெரிதாக இருக்கிறது என வாழ்த்தினார். மற்றவர்கள் எல்லாம் எதற்காக இவ்வளவு பெரிய வீடு என்று கேட்ட நிலையில் இப்படி மனதார வாழ்த்திய வெகு சிலரில் கண்ணனும் ஒருவர். இனி அவர் எடுக்கும் படங்களுக்கு என் தரப்பில் இருந்து முழு ஆதரவு கொடுப்பேன்” என்று கூறினார்.

இயக்குநர் ஆர்.கண்ணன் பேசும்போது,

“முத்து கணேசின் இசை படத்தை வேற லெவலுக்கு கொண்டு சென்றுவிட்டது. கிட்டத்தட்ட மூன்று நான்கு மாதங்கள் பின்னணி இசை அமைக்க மட்டுமே நேரம் எடுத்துக் கொண்டனர். தனஞ்செயன் சாருக்கும் எனக்கும் இத்தனை வருட கால நட்பில் சின்ன சின்ன சண்டைகள் வரும்.. பேசாமல் இருந்திருக்கிறோம்.. அதே சமயம் அதையெல்லாம் மறந்துவிட்டு மீண்டும் இணைந்து பணியாற்றுவோம்.. சின்னச்சின்ன விஷயங்களை எல்லாம் நுணுக்கமாக கவனித்து சில ஆலோசனைகளை தனஞ்செயன் கூறுவார். அது எல்லாமே படத்தை மேம்படுத்துவதற்காக தான் இருக்கும்.

கடந்த என்னுடைய ஐந்து படங்களுக்கு மிகப்பெரிய ஆதரவாக இருக்கும் பைனான்சியர் மகேந்திரன் இந்தப் படத்திற்கும் என்னை நம்பி ரொம்பவே பக்கபலமாக இருந்தார். தொல்காப்பியன், சீனி செல்வராஜ் இருவருமே இந்த படத்தின் விவாதத்தில் எனக்கு மிகப்பெரிய உதவியாக இருந்தார்கள். CG பணிகளை கவனித்த வெங்கி இந்த படத்திற்கு மிகப்பெரிய பக்கபலமாக இருக்கிறார். நாயகி ஹன்சிகா சண்டை காட்சிகள், எமோஷனல் காட்சிகள் என இந்த படத்திற்கு மிகப்பெரிய அளவில் கடின உழைப்பை கொடுத்தார். அவர் தற்போது வெளிநாட்டில் இருக்கிறாரி. நாங்கள் திடீரென்று இந்த நிகழ்ச்சியெய் ஏற்பாடு செய்ததால் அவரால் வர முடியவில்லை. அவருக்கு இந்த நேரத்தில் நன்றியை சொல்லிக் கொள்கிறேன்” என்று கூறினார்.

முடிவில், இப்படத்தின் மேக்கிங் வீடியோவை தயாரிப்பாளர் தனஞ்செயன் டைரக்டர் சுசீந்திரன் இணைந்து வெளியிட்டார்கள்.