Gaja Cyclone : வரும் 15ம் தேதி கஜா புயல் சென்னைக்கும், நாகப்பட்டினத்திற்கும் இடையே வர இருப்பதால், இதன் காரணமாக வட தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் , மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் மிகமிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது அதற்கு “கஜா ” என்று பெயர் வைத்துள்ளனர்.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ” தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நேற்று முன்தினம் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், நேற்று புயலாக வலுப்பெற்று 5.30 மணிக்கு, சென்னைக்கு கிழக்கு பகுதியில் வடகிழக்கு பகுதியில் சுமார் 840 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது.
இந்த புயலுக்கு கஜா என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலானது வரும் 15ம் தேதி சென்னைக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையே புயலை கடக்ககூடும்.
இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசும். காற்றானது மணிக்கு 80முதல் 90 கிலோமீட்டர் வேகத்தில் வீசும்.
அந்த நேரத்தில் கடல் கொந்தளிப்பாக காணப்படும், எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
ஆழ்கடலில் இருக்கும் மீனவர்கள் இன்று (12.11.19) கரைக்கு திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மழையை பொறுத்தவரை வரும் 15- ஆம் தேதி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மிதமான மழையும் , ஒருசில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்யும் என்று கூறினார்.
கஜா புயல் எச்சரிக்கை தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, இன்று மாலை ஆலோசனை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை கூட்டத்தை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
இந்த கூட்டத்தில் கஜா புயல் குறித்து எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தபட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன” இவ்வாறு தெரிவித்தார் .