பிரபல கன்னட நடிகர் தனுஷ் திரைப்படத்தில் இணைந்துள்ளார்.

தென்னிந்திய திரை உலகில் முன்னணி ஹீரோவாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தனுஷ். திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவரது நடிப்பில் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி இருக்கும் வாத்தி திரைப்படம் வரும் பிப்ரவரி 17 ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாக உள்ளது.

இப்படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். ஆக்சன் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசி, கேரளா பகுதிகளில் உள்ள காடுகளில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் நடிகை பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் கன்னட திரை உலகில் பிரபல முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் சிவராஜ் குமார் இப்படத்தில் தனுஷ்க்கு அண்ணனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பை படக்குழு தெரிவித்துள்ளது. ஏற்கனவே இவர் ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.