Commonwealth Games Tournament :
புதுடில்லி: துப்பாக்கி சுடுதல் போட்டி நீக்கப்பட்டதால், வரும் 2022ல் நடக்கவுள்ள காமன்வெல்த் விளையாட்டை இந்தியா புறக்கணிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில், வரும் 2022ல் காமன்வெல்த் விளையாட்டு நடக்கவுள்ளது. இதில், துப்பாக்கி சுடுதல் போட்டி நீக்கப்பட்டது.
இதற்கு காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பு (சி.ஜி.எப்.,) நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. தவிர, பெண்கள் ‘டுவென்டி-20’, பீச் வாலிபால், பாரா டேபிள் டென்னிஸ் என, 3 புதிய போட்டிகள் சேர்க்கப்பட உள்ளது.
இது, இந்தியாவுக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் கடந்த 2018ல் ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடந்த காமன்வெல்த் விளையாட்டில் துப்பாக்கி சுடுதலில் மட்டும் 7 தங்கம் உட்பட 16 பதக்கங்கள் கிடைத்தது. இதற்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐ.ஓ.ஏ.,) சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐ.ஓ.ஏ., பொதுச் செயலாளர் ராஜீவ் மேத்தா கூறியது: வரும் 2022ல் நடக்கவுள்ள காமன்வெல்த் விளையாட்டில் இருந்து துப்பாக்கி சுடுதல் போட்டி நீக்கப்பட்டது ஏமாற்றம்.
இந்திய வீரர்கள் துப்பாக்கி சுடுதலில் சாதனை!
இப்போட்டி, இந்தியாவில் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது. துப்பாக்கி சுடுதல் போட்டியை நீக்கக் கூடாது என, ஏற்கனவே காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்புக்கு (சி.ஜி.எப்.,) வலியுறுத்தி இருந்தோம். ஆனால் நீக்கி உள்ளனர். சி.ஜி.எப்., தனது முடிவை பின்வாங்குவது கடினம்.
மூன்று புதிய போட்டிகளை சேர்ப்பதற்கான வாக்கெடுப்புக்கு இன்னும் ஒரு மாத காலம் உள்ளது. அதற்குள் சி.ஜி.எப்., தனது முடிவை மாற்றிக் கொள்ளும் என எதிர்பார்க்கிறோம்.
ஒருவேளை முடிவை மாற்றாவிட்டால், காமன்வெல்த் விளையாட்டில் இருந்து இந்தியா விலகுவதற்கான வாய்ப்பும் உள்ளது.
இவ்வாறு ராஜீவ் மேத்தா கூறினார்.