Chandra Babu Naidu Meets Stalin :
நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்கும் நோக்கில், சந்திரபாபு நாயுடு மாபெரும் கூட்டணி அமைக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக, இன்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் உடன் சென்னையில் சந்தித்து பேச உள்ளார்.
2014 – இல் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையில் ஆன தேசிய ஜனநாயக கட்சியின் ஒரு அங்கமாக சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சி இருந்தது.
ஆனால் உறுதியளித்த படி, ஆந்திர மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து எதுவும் தரவில்லை என்று சந்திரபாபு நாயுடு அதிருப்தி கொண்டார்.
மேலும் தெலுங்கு தேசம் பலமுறை கூறியும், அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற எந்தத் முயற்சியும் பாஜக எடுத்தபாடில்லை.
இதன் காரணமாக பாஜகவுடன் விரிசல் ஏற்பட்டு, தெலுங்கு தேச கட்சி வெளியே வந்தது.
இந்நிலையில், வரும் 2019 லோக்சபா தேர்தலில் பாஜகவை எதிர்த்து வலுவான கூட்டணி அமைக்கும் முயற்சியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மேற்கொண்டு வருகிறார்.
கடந்த வாரம் டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து கூட்டணியை உறுதி செய்தார்.
மேலும், ஏற்கனவே கம்யுனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாடு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, சமாஜ் வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் ஆகியோரை சந்தித்து பேசி உள்ளார்.
இந்நிலையில், இன்று திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களை சந்தித்து பேச ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சென்னை வருகிறார்.
இன்று மாலை 6 மணியளவில் விமான நிலையம் வந்தடையும் சந்திரபாபு நாயுடு, சரியாக 6.30 மணியளவில் ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க ஸ்டாலின் இல்லத்தில் அவரை சந்தித்து பேச உள்ளார்.
இந்நிலையில், ஏற்கனவே டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்து கூட்டணியை உறுதி செய்துவிட்டு சந்திரபாபு நாயுடு கூறிய கருத்தை ஸ்டாலின் வரவேற்றதை தொடர்ந்து தற்போது இவர்களுக்கு கூட்டணி அமைப்பதில் எந்த சிக்கலும் ஏற்படாது என்று தெரிகிறது.