Pallavaram : பல்லாவரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் குற்றங்கள் எதுவும் நடக்காமல் தடுக்க 1014 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதனை, செயல்பாட்டிற்கு கொண்டுவரும் நிகழ்ச்சி பல்லாவரத்தில் ரேடியல் சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் இதனை தொடங்கி வைத்தார். அவர் பேசியதாவது, ” சென்னை மக்களின் பாதுகாப்பிற்காக சென்னை முழுவதும் சுமார் 60 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
சென்னையிலேயே அதிகபட்சமாக பரங்கிமலை சரக்கதில் சுமார் 8ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதன்மூலம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 80 முதல் 90 சதவீதம் குற்றங்கள் குறைந்துள்ளது.
பண்டிகை நாட்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடர்கள் பொதுமக்களிடம் கொள்ளை அடிப்பதை தடுக்கும் வகையில், சிசிடிவி கேமராவில், ஃபேஸ் ஐடன்டிபிகேஷன் எனும் சாப்ட்வேர் -ஐ பயன்படுத்தி , குற்றவாளிகளை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருவதால், தி நகர் போன்ற கூட்ட நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளில் குற்றங்கள் 100 சதவீதம் குறைந்துள்ளது.
மேலும், பொதுமக்களும் தங்கள் வீடு மற்றும் வணிக வளாகங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும், இதனால் நாம் இல்லாத போதும் சிசிடிவி கேமரா நமக்கு மூன்றாவது கண்ணாக இருந்து குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கப்படும்” இவ்வாறு கூறினார் .