Aswin : சிட்னியில் நடைபெறவுள்ள 4-வது டெஸ்ட் போட்டிக்கு வெல்லும் முனைப்பின் எதிரொலியாக இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் மற்றும் ஆஸி., வீரர்கள் 7 பேர் செவ்வாய்க்கிழமை பயிற்சி மேற்கொண்டனர்.
4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. கடந்த அடிலெய்ட் போட்டியின் போது அடிவயிற்றுப் பகுதியில் காயமடைந்த அஸ்வின் பெர்த்,மெல்போர்ன் போட்டிகளில் ஆடவில்லை.
இந்நிலையில் சிட்னி டெஸ்ட் அணியில் இடம் பெற அவர் தனது உடல்தகுதியை நிரூபிக்க வேண்டியுள்ளது.
இந்நிலையில் புத்தாண்டு தினமான செவ்வாய்க்கிழமை அஸ்வின், அணியின் உடலியக்க நிபுணர் பெட்ரிக் பர்ஹர்ட் துணையோடு தனியாக உள்ளரங்கில் பயிற்சி மேற்கொண்டார்.
மேலும், அஸ்வின் இல்லாத நிலையில் ஜடேஜா சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிட்டி மைதானம் சுழற்பந்து வீச்சுக்கும் ஒத்துழைக்கும் எனக் கருதப்படுவதால் அஸ்வின் சேர்க்கப்படுவார் எனத் தெரிகிறது.
அதே நேரத்தில் ஆஸி., கேப்டன் டிம்பெயின், லயன், உஸ்மான் கவாஜா, ஆரோன்பின்ச், மார்க்கஸ் ஹாரிஸ், பீட்டர் ஹென்ட்ஸ் கோம்ப், லேபுஸ்ஸென் ஆகியோர் சிட்னி மைதானத்தில் வலைப்பயிற்சி மேற்கொண்டனர். ஆஸ்., அணியில் எந்த மாற்றமும் இருக்காது. ஆரோன் பின்ச் மிடில் ஆர்டரில் இறங்கலாம் எனக் கருதப்படுகிறது.