சூர்யா நடிப்பில் சிறுத்தை இயக்கிய ‘கங்குவா’ படம் அடுத்த மாதம் 14-ம் தேதி உலக அளவில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இந்த படம், சூர்யா கேரியரில் மட்டுமில்லாமல், இந்திய அளவிலும் மிகப்பெரிய பட்ஜெட் படமாக அமைந்துள்ளது.
இந்நிலையில், இந்த படத்தின் சூட்டிங், டப்பிங் வேலைகளை நிறைவு செய்துவிட்டு அடுத்ததாக தன்னுடைய ‘சூர்யா 44’ படத்திற்காக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இணைந்து அந்த படத்தின் சூட்டிங்கையும் தற்போது நிறைவு செய்துள்ளார் சூர்யா. இந்த படத்தின் போஸ்ட் புரொடக்சன்ஸ் வேலைகளும் தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் சூழலில், அடுத்த ஆண்டு துவக்கத்தில் படம் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து, ‘சூர்யா 44’ படம் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், படத்தின் டைட்டில் உள்ளிட்ட அடுத்தடுத்த அப்டேட்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. இதனிடையே, அடுத்ததாக அவர் வெற்றிமாறனுடன் ‘வாடிவாசல்’ படத்தில் இணைவாரா அல்லது சுதா கொங்கராவுடன் அடுத்த படத்திற்கான டிஸ்கஷன் நடக்குமா? என்ற கேள்வி ரசிகர்களிடையே காணப்பட்டது.
இந்நிலையில், ‘விடுதலை 2’ படத்தின் சூட்டிங் இன்னும் முழுமையாக முடியாத நிலையில் ‘வாடிவாசல்’ படத்தின் சூட்டிங் மேலும் தள்ளிப் போக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே, அடுத்ததாக ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா தன்னுடைய ‘சூர்யா 45’ படத்திற்காக இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பின்படி, இந்த படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்க, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், படத்தின் அறிவிப்பை மிரட்டலான போஸ்டருடன் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
அதில் அரிவாள், கத்தி போன்றவற்றில் பட்டையிடப்பட்டுள்ளதாக காணப்படுகிறது. மேலும், குதிரை போன்ற ஒரு உருவமும் இந்த போஸ்டரில் காணப்படுகிறது. இதனால், ஆன்மீகமும் ஆக்சனும் கலந்த கதைக்களமாக இந்த படம் அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டுக்குள் படத்தின் சூட்டிங் நிறைவு செய்யவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
முன்னதாக, பாலா இயக்கும் ‘வணங்கான்’ படத்தில் சூர்யா நடிக்கவிருந்தார். பின்னர், அவர் விலக.. அருண் விஜய் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
‘சூர்யா- 45’ படத்தில் ஜோதிகா நடிக்கிறாங்களா ஆர்.ஜே.பி.சார்.?