Womens and Childrens Safety :
சென்னை: பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக சுமார் ரூ.7.5 கோடி செலவில் புதிய 40 அம்மா ரோந்து வாகனங்களின் சேவையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைத்தார்.
பொது இடங்களில் பெண்கள் பாதுகாப்பு பொருட்டு, பெண்கள் பாதுகாப்பு திட்டத்திற்காக மத்திய அரசு டெல்லி, சென்னை, மும்பை, கல்கத்தா, பெங்களூரு, ஐதராபாத், அகமதாபாத், லக்னோ போன்ற 8 நகரங்களை தெரிவு செய்துள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளின் பங்களிப்புடன் சுமார் ரூ.425 கோடி ரூபாய் சென்னைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எனவே சென்னை பெருநகரத்தில் வசிக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காகவும், சென்னையில் குற்றங்களை தடுக்கும் பொருட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அனைத்து மகளிர் காவல் நிலைய ரோந்து பயன்பாட்டிற்காக அம்மா ரோந்து வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளது.
இளஞ்சிவப்பு நிறம் கொண்ட அம்மா ரோந்து வாகனங்கள் மூலம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களை தடுக்கவும், அவர்களுக்கு தேவையான பாதுகாப்பை உறுதி செய்யவும்,
சென்னை நகரத்திலுள்ள பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், வணிக வளாகங்கள், மார்க்கெட்டுகள், வழிபாட்டு தலங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், கடற்கரை ஆகிய அனைத்து இடங்களிலும் ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதன்மூலம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தனி பாதுகாப்பு அளிக்கப்படும். எனவே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில்,
ரூ.7.5 கோடி செலவில் வாங்கப்பட்ட 40 வாகனங்களின் சேவையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தலைமை செயலகத்தில் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை செயலாளர் சண்முகம், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, அமைச்சர்கள், காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி, சென்னை காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.