murder
தனது கணவரை தூக்க மாத்திரை கொடுத்து மயங்க செய்து மனைவியே கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புழல் பகுதியில் உள்ள புத்தகரத்தில் வசித்து வருபவர் சுரேஷ். இவர் அப்பகுதியில் இறைச்சிக்கடையை நடத்தி வந்தார்.

இவருக்கும், அனுஷ்யா என்கிற பெண்ணுக்கும் 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறான்.

இந்நிலையில், கடந்த 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டில் சுரேஷ் இறந்து கிடப்பதாக அவரின் மனைவி அனுஷ்யா தொலைப்பேசி மூலம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

தூக்க மாத்திரை சாப்பிட்டு தன் கணவர் தற்கொலை செய்து கொண்டதாக அனுஷ்யா போலீசாரிடம் கூறினார்.

ஆனால், அளவுக்கு அதிகமான தூக்கமாத்திரை சாப்பிட்டதோடு, கழுத்து நெரிக்கப்பட்டு அவர் கொலை செய்யப்பட்டிருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அனுஷ்யாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் பேசியதில் சந்தேகமடைந்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இதில், அவர்தான் சுரேஷை கொலை செய்தது தெரியவந்தது.சுரேஷிற்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.

எனவே, தினமும் குடித்துவிட்டு வந்து மனைவி அனுஷ்யாவை அடித்து உதைத்ததால் ஆத்திரமடைந்த அவர் சுரேஷை கொலை செய்வது என முடிவெடுத்தார்.

தோசையில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துள்ளார். சுரேஷ் சுயநினைவு இழந்தபின் துப்பட்டாவால் கழுத்தை நெறித்து அவரை கொலை செய்துள்ளார்.

இது அனைத்திற்கும் முரசொலிமாறன் என்கிற உறவினர் அனுஷ்யாவுக்கு உதவியாக இருந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

எனவே போலீசார் அனுஷ்யாவை கைது செய்தனர். மேலும், தலைமறைவான முரசொலி மாறனை வலை வீசி தேடி வருகின்றனர்.