சென்னை: நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியது. மேலும் காலை 9 மணிக்கு மேல் முன்னணி நிலவரம் தெரியவரும்.
தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு கடந்த 21-ம் தேதி இடைத்தேர்தல் வாக்குபதிவு நடைபெற்றது. அதேபோன்று, புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதிகளிலும் அன்றைய தினமே இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் நா.புகழேந்தியும், அதிமுக சார்பில் முத்தமிழ்செல்வனும், நாம் தமிழர் கட்சி சார்பில் கந்தசாமி உள்ளிட்ட 12 பேர் போட்டியிட்டனர். நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரன், அதிமுக சார்பில் நாராயணன், நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜநாராயணன் உள்ளிட்ட 23 பேர் போட்டியிட்டனர்.
அதேபோன்று, புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஜான்குமார், என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் புவனேஸ்வரன், நாம் தமிழர் கட்சி சார்பில் பிரவீனா உள்ளிட்ட 9 பேர் களத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாக்குபதிவில், விக்கிரவாண்டி தொகுதியில் 81.41 சதவீத வாக்குகளும், நாங்குநேரி தொகுதியில் 66.35 சதவீதம் வாக்குகளும், புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதியில் 69.44 சதவீதம் வாக்குகளும் பதிவாகின.
இந்நிலையில் நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது…
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகிறது., அதை தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதையடுத்து, கட்சி தொண்டர்கள் அனைவரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் காலை 9 மணிக்கு மேல் முன்னணி நிலவரம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.