Kanne Kalaimane Vasunthara : பேராண்மை படத்தில் ஐந்து பெண்களில் ஒருவராக களமிறங்கி, தென்மேற்கு பருவக்காற்று படத்தில் தனிக் கதாநாயகியாக கவனம் ஈர்த்தவர் நடிகை வசுந்தரா.
எஸ்.பி.ஜனநாதன், சமுத்திரக்கனி, சீனுராமசாமி என முத்திரை இயக்குநர்களின் கையால் மோதிரக்குட்டு பெற்றவர். தற்போது சீனு ராமசாமியின் ‘கண்ணே கலைமானே’ படம் மூலம் மீண்டும் லைம்லைட்டுக்கு வந்துள்ளார்.
கண்ணே கலைமானே படம் பற்றி வசுந்தரா கூறியதாவது,
‘கண்ணே கலைமானே’ படத்தில் முக்கியமான கேரக்டரை சீனுராமசாமி சார் எனக்கு கொடுத்துள்ளார். எப்பவுமே அவருக்கு பிடித்தமாதிரி இனிமையா, கொஞ்சம் நகைச்சுவையா, அதேசமயம் கொஞ்சம் கடினமான அப்பட்டமான கிராமத்துப் பெண் கேரக்டர் ஒன்று இருக்கும் இல்லையா.? அப்படி ஒரு கேரக்டரில் தான் நான் நடிக்கிறேன்.
இதில் கிராமமும் இல்லாத மிகப்பெரிய நகரமும் அல்லாத ஒரு மீடியமான நகரத்துப் பெண்ணாக ஒரு தேங்காய் மண்டி ஒன்றின் ஓனரின் மகளாக நடித்திருக்கிறேன்.
அந்த கேரக்டரை உருவாக்கும்போதே என் உருவம் தான் சீனு சாருக்கு மனதில் தோன்றியதாம். அதனால் எட்டு வருடம் கழித்து என்னை அழைத்துள்ளார்.
அவர் உருவாக்கிய கேரக்டர் இதுவரை தப்பாகி இருக்கிறதா என்ன..? இதிலும் அப்படி ஒரு அருமையான கேரக்டர்.
உதயநிதி ஸ்டாலின் தோழியாக இதில் நடித்துள்ளேன். பெரிய இடத்துப் பிள்ளை என்கிற எந்த பந்தாவும் இல்லாமல் பழகினார். தமன்னாவுடன் சில காட்சிகள் சேர்ந்து நடித்தாலும் அது புது அனுபவமாக இருந்தது.
சின்ன வயதில் டிவியில் பார்த்த வடிவுக்கரசி அம்மாவுடன் நடிக்கும்போது என்னுடைய பாட்டியைப் பார்ப்பது போலவே இருந்தது.
இத்தனை வருஷங்களில் சீனு ராமசாமியின் வயசு மட்டும் மாறியிருக்கே தவிர, அவர் அப்படியே தான் இருக்கிறார். மாறவே இல்லை. முன்னெல்லாம் சில காட்சிகளை படமாக்கும்போது கொஞ்சம் யோசிச்சு பண்ணுவார்..
ஆனா இப்ப ஸ்பாட்டுக்கு வரப்பவே இதுதான் எடுக்கணும்னு தீர்மானிச்சு முன்னை விட ரொம்பவே தன்னம்பிக்கையா படம் பண்றார். நான் நடித்த படத்தோட டைரக்டர் தேசிய விருது வாங்கிட்டார்னு சொல்லும்போது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கும்.
இந்தப்படத்துல தேங்காய் மண்டிக்கு சொந்தக்காரி அப்படிங்கிறதால கொப்பரை தேங்காய் உடைச்சு உடைச்சு கையில எல்லாம் சரியான காயம்..
முதல் நாள் ஷூட்டிங் ஸ்பாட்டுல கொண்டுபோய் விட்டுட்டு மறுநாள் காலையிலேயே எந்த பயிற்சியும் இல்லாம தேங்காய் உடைக்க விட்டுட்டாங்க. இந்த படம் சிறப்பாக வந்துள்ளது என கூறினார்.