திரும்பவும் காதல், அதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன் என திருப்பதி ஏழுமலையானை தரிசித்த பிறகு நான்காவது திருமணம் பற்றி பேசியுள்ளார் வனிதா.
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகரான விஜயகுமாரின் மூத்த மகள் தான் வனிதா விஜயகுமார். சந்திரலேகா படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் நடிகர் ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகள் பெற்றெடுத்தார்.
அதன் பிறகு அவரை விவாகரத்து செய்த வனிதா விஜயகுமார் ஆந்திராவை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டு திரும்பவும் ஒரு குழந்தை பெற்றுக் கொண்டு அவரை விவாகரத்து செய்தார்.
இரண்டு திருமணங்களும் விவாகரத்தில் முடிந்ததை தொடர்ந்து தனது மகளுடன் தனியாக வாழ்ந்து வந்த வனிதா விஜயகுமார் கடந்த வருடம் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஓரிரு மாதத்தில் அவர் குடிக்கு அடிமையானவர் என சொல்லி அவரையும் பிரிந்தார்.
கடந்த மாதம் பீட்டர் பால் உடல் நல குறைபாட்டால் காலமான நிலையில் தற்போது வனிதா விஜயகுமார் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது தற்போது தமிழில் நிறைய வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. நல்ல நல்ல கதாபாத்திரங்கள் அமைகின்றன. அதற்கெல்லாம் நன்றி சொல்லத்தான் கோவிலுக்கு வந்தேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் தனக்கு மீண்டும் காதல் வரலாம், அதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்.. ஒருவேளை திரும்பவும் காதல் வந்தால் என்னுடைய வாழ்க்கையில் நன்றாக யோசித்து திருமணம் பற்றி முடிவு எடுப்பேன் என தெரிவித்துள்ளார்.