இயக்குனர் மணிரத்தினம் சோழ வம்சத்தின் வரலாற்றை மறைத்துள்ளதாக சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த செல்வம் என்பவர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இயக்குனர் மணிரத்தினம் மாபெரும் பொருட்செலவில் தயாராகி இருக்கும் கல்கி புகழ் பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்ட படம் தான் “பொன்னியின் செல்வன்-1”. இதில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளதாக கூறி இயக்குனர் மணிரத்தினம் மற்றும் நடிகர் விக்ரம் மீது சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த செல்வம் என்பவர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள விக்ரம் நெற்றியில் நாமம் இட்டிருக்கும் போன்ற காட்சி அமைப்பு தவறானது எனவும் இயக்குநர் மணிரத்னம் வரலாற்றை மறைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல இன்னும் எத்தனை வரலாறுகள் மறைக்கப்பட்டுள்ளது என்பதை படம் பார்த்தால் தான் தெரிந்து கொள்ள முடியும் என்பதால் படத்தை வெளியிடும் முன் தங்களுக்கு திரையிட்டு காட்ட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். தங்களுக்கு திரையிட்டு காட்டாமல் படத்தை வெளியிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொன்னியின் செல்வன் படத்தில் வரலாறு மறைக்கப்பட்டுள்ளதா என்பது தங்களுக்கு தெரிய வேண்டுமென வக்கீல் நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோழ வம்சத்தை வைத்து படம் எடுக்கும் மணிரத்னத்திற்கு விஸ்வாசமாக இருக்கும் நிலையில், வம்சத்தின் வரலாறு மறைக்கப்பட்டிருப்பது தெரியவந்தால் விஸ்வரூபம் எடுப்போம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இயக்குநர் மணிரத்னம் படத்தின் தயாரிப்பாளர் சுபாஸ்கரன், நடிகர் விக்ரம் உள்ளிட்ட முக்கிய நடிகர்களுக்கும் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.