திண்டுக்கல்லில் உள்ள தனியார் வங்கியில் அஜித்தின் துணிவு படத்தை பார்த்து கொள்ளையர்கள் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.

தமிழ் சினிமாவில் தல என்று ரசிகர்கள் கொண்டாடும் நாயகனாக வளம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் போனிகாபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அண்மையில் வெளியான ‘துணிவு’ திரைப்படம் மெகா பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து வசூலை குவித்து வருகிறது.

இந்நிலையில் பேங்க் கொள்ளைகளை மையமாகக் கொண்டு உருவாகி இருந்த இப்படத்தை பார்த்து இளைஞர் ஒருவர் திண்டுக்கல்லில் தாடிக்கொம்பு சாலையில் உள்ள தனியார் வங்கியில் ஊழியர்கள் முகத்தில் ஸ்பிரே அடித்து, கட்டிப் போட்டுவிட்டு கொள்ளையடிக்க முயன்றுள்ளார். அப்போது வங்கி ஊழியர் ஒருவர் தப்பி வெளியே வந்து கூச்சலிட்டதால் வங்கியின் உள்ளே நுழைந்த கொள்ளையனை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இது தொடர்பான விசாரணையில் திண்டுக்கல்லில் பூச்சி நாயகன் பட்டி பகுதியை சேர்ந்த அணில் ரகுமான் என்பவர் வாழ்க்கையில் ஏற்பட்ட விரத்தியால் துணிவு படம் பார்த்துவிட்டு கொள்ளையடிக்கும் முயற்சி செய்ததாக அந்த இளைஞர் வாக்குமூலம் கொடுத்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தற்போது இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது.