திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசு திடீரென உத்தரவு பிறப்பித்துள்ளது.
TN Govt Order on Theatre Opening : சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் தொற்று காரணமாக உலக நாடுகள் அனைத்துமே பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வைரஸ் தொற்றால் இந்தியாவும் பாதிப்புக்குள்ளாகி தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
இதனால் பல மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. புதிய படங்களும் ரிலீஸ் ஆக தொடங்கியுள்ளன.
அந்தவகையில் இந்த வருடம் பொங்கலுக்கு தளபதி விஜய்யின் மாஸ்டர் மற்றும் சிம்புவின் ஈஸ்வரன் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக உள்ளன.
சிம்பு மற்றும் விஜய் ஆகியோர் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்த நிலையில் தமிழ்நாடு அரசு அதற்கு அனுமதி அளித்தது.
ஆனால் 100% இருக்கைக்கு அனுமதி அளிக்கக் கூடாது என பல்வேறு தரப்பிலிருந்து கருத்துக்கள் கூறப்பட்டு வந்தன. மத்திய அரசு மற்றும் உயர் நீதிமன்றமும் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி மறுத்தது.
இதனால் தமிழக அரசு தற்போது மீண்டும் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
இதனால் மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் உள்ளிட்ட திரைப்படங்கள் திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அப்படியே படம் வெளியாகினாலும் பெரிய அளவில் வசூல் கிடைக்குமா என்பது கேள்விக்குறியே. இதனால் இருதரப்பு ரசிகர்களுமே அதிர்ச்சி அடைந்துள்ளனர்.