தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை மீது மாட்டு சாணம் வீசியது அங்கு பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இதனை கண்டித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அருகே திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்ட நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளுவர் சிலை மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சாணத்தை வீசிச் சென்ற சம்பவம், அப்பகுதியில் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டி என்னும் பகுதியில், சுமார் 5,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், “இன்று அதிகாலை 5 மணியளவில் பஞ்சாயத்து யூனியன் அலுவகத்தில் அமைத்துள்ள திருவள்ளுவர் சிலையை மர்மநபர்கள், சாணி மற்றும் கருப்புத்துணிகளால் அவமதித்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது”!..
நேற்று பாங்காங் தலைநகரில் அந்நாட்டு மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தை பிரதமர் மோடி வெளியிட்டிருந்தார். இதையடுத்து ‘தமிழகத்தில் உள்ள பாஜக நிர்வாகிகள் திருவள்ளுவரின் உடையை காவி நிறத்தில் உள்ளவாறு அமைத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர். மேலும் தாய்லாந்தில் வெளியிடப்பட்ட புத்தகத்திலும் திருவள்ளுவர் காவி உடை அணிந்திருப்பது போன்று இருந்தது குறிப்பிடத்தக்கது’.
இந்த சம்பவங்களுக்கு, பல்வேறு கட்சி தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை தஞ்சாவூரில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் புகாரை ஏற்றுக்கொண்ட போலீஸார், திருவள்ளுவர் சிலையை அவமதித்த மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சிலையை அவமதித்த மர்மநபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் திருவள்ளுவர் சிலை மீது சாணம் வீசியது எதிர்த்து அப்பகுதி மக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.