Thiruthani Water Scheme : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி மு. பழனிசாமி அவர்கள் இன்று (27.7.2020) தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சியில் 109 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் அபிவிருத்தித் திட்டத்திற்கு காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்கள்.
மேலும், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் 18 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கட்டடங்களையும் திறந்து வைத்தார்கள்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், சென்னை நீங்கலாக, தமிழ்நாட்டில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் குடிநீர் வழங்கல் மற்றும் பாதாள சாக்கடைத் திட்டங்களை மேற்கொள்ளும் நோக்கில் தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டது.
இவ்வாரியம் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடைத் திட்டங்களுக்கு திட்டமிடுதல், ஆய்வு, வடிவமைப்பு, செயலாக்கம் மற்றும் பயன்பாட்டுக்கு கொண்டு வருதல், கூட்டுக் குடிநீர்த் திட்டங்களை இயக்குதல் மற்றும் பராமரித்தல், குடிநீர் தரக் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடு, குடிநீர் ஆதாரங்களின் நீடித்த நிலைத்தன்மைக்கான செயல்பாடுகள் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது.
2016-17ஆம் ஆண்டிற்கான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கையில், நகர்ப்புர உள்ளாட்சிகளில் உள்ள குடியிருப்புகள் அனைத்திற்கும் உரிய அழுத்தத்துடன் குழாய்கள் மூலம் பாதுகாக்கப்பட்ட தரமான குடிநீர் வழங்குதல் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசின் முதன்மையான நோக்கமாகும். அதன்படி திருத்தணி நகராட்சியில் குடிநீர் அபிவிருத்தி திட்டத்திற்கான ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
மருத்துவ காப்பீட்டு தொகை ரூ.2 லட்சத்திலிருந்து இனி ரூ.5 லட்சமாக உயர்வு: முதல்வர் ஆணை!
அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சியில் 109 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் அபிவிருத்தித் திட்டத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்கள்.
இந்த குடிநீர் அபிவிருத்தித் திட்டத்தை செயல்படுத்தப்படுவதன் மூலம், திருத்தணி நகராட்சியில் வசிக்கும் சுமார் 52 ஆயிரம் மக்கள் பயன் பெறுவர்.
மேலும், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் திருவொற்றியூர் மண்டலம் – திருவொற்றியூர் மெயின் ரோடு, தண்டையார்பேட்டை மண்டலம் – வி.ஆர். நகர், திரு.வி.க. நகர் மண்டலம் – புளியந்தோப்பு மற்றும் ஜி.கே.எம். காலனி, பெருங்குடி மண்டலம் – மடிப்பாக்கம் ஆகிய இடங்களில் 6 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 நகர்ப்புர ஆரம்ப சுகாதார மையக் கட்டடங்கள்; மணலி மண்டலம் – மணலி விரைவு சாலையில் 9 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 100 படுக்கை வசதிகள் கொண்ட நகர்ப்புர சமுதாய மையம்; இராயபுரம் மண்டலம் – எழும்பூர், வேப்பேரி மற்றும் என்.எஸ்.சி. போஸ் சாலை ஆகிய இடங்களில் 2 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3 சிறப்பு காப்பகங்கள், என மொத்தம் 18 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பெருநகர சென்னை மாநகராட்சி கட்டடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று திறந்து வைத்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், சென்னை மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சுமார் 210 சிறிய குளங்கள், ஏரிகள், நீரோடைகள், ஆகியவற்றில் உள்ள ஆகாயத் தாமரைகள் மற்றும் மிதக்கும் கழிவுகள் ஆகியவற்றை அகற்றி கொசு உற்பத்தியை தடுத்திட 1 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு மினி ஆம்பிபியன் உபகரணம், பெருநகர சென்னை மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 3.5 மீட்டருக்கும் குறைவான அகலமுள்ள கால்வாய்களில் உள்ள ஆகாயத் தாமரைகள், தாவரங்கள், மிதக்கும் பொருட்கள், கழிவுகள் ஆகியவற்றை அகற்ற 6 கோடியே 49 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு ரோபோட்டிக் மல்டிபர்பஸ் எஸ்கவேட்டர் உபகரணம், பெரிய கால்வாய்களை தொய்வின்றி தூய்மைப்படுத்தி, சுற்றுப்புறத்தை மேம்படுத்தவும், கொசு உற்பத்தியை தடுக்கும் பணியினை மேற்கொள்ளும் பொருட்டும், 7 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு ஆம்பிபியன் உபகரணம் ஆகிய 3 உபகரணங்களை பெருநகர சென்னை மாநகராட்சியின் பயன்பாட்டிற்காக வழங்கிடும் விதமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று உபகரணங்களுக்கான சாவிகளை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் திரு.கோ. பிரகாஷ், இ.ஆ.ப., அவர்களிடம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களும் அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.