Thanga Thamilchelvan – தேனி: மக்கள் நல்ல தலைமையை மட்டுமே தேர்வு செய்வார்கள், பணம் இருப்பதால் முகேஷ் அம்பானி பிரதமராக முடியுமா.. என தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அமமுக கட்சியின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. தேனி தொகுதியில் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தங்க தமிழ்செல்வன் தற்போது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதில் முக்கிய அம்சம் என்னவென்றால், அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வத்தின் மகனான ரவீந்திரநாத்தை எதிர்த்து தான் தங்க தமிழ்செல்வன் களமிறங்குகிறார் என்பதே.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தங்க தமிழ்செல்வன் கூறுகையில், ” மக்கள் நல்ல தலைமையை மட்டுமே தேர்வு செய்வார்கள், பணம் இருப்பதால் முகேஷ் அம்பானி பிரதமராக முடியுமா? ” என கூறியிருந்தார்.
இதற்கிடையே, தங்க தமிழ்செல்வன் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு, அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் பதில் அளிக்கையில், தேனி தொகுதியில் யார் வேட்பாளராக நின்றாலும் கவலையில்லை என்றும் பிரசார யுக்திகள் அதற்கு பதில் சொல்லும் எனவும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.