Thalapathy 63 :
அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63.
கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் கதை தன்னுடையது என்று எழுத்தாளர் சங்கத்தை குறும்பட இயக்குநர் கே.பி.செல்வா நாடியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கே.பி.செல்வாவிடம் விசாரித்த போது, ”நான் பெண்கள் கால்பந்து போட்டியை கதைக்களமாக வைத்து 265 பக்கங்கள் கொண்ட கதையை தயார் செய்து வைத்திருந்தேன்.
இந்தக் கதையை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் மற்றும் ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனத்திடம் கூறியிருந்தேன்.
ஆனால், அதற்கிடையே இந்த கதையை அட்லீ இயக்க இருக்கும் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். இது தொடர்பாக நான் முதன்முறையாக நீதிமன்றத்தை அணுகிய போது எழுத்தாளர்கள் சங்கத்தை அணுகுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியது.
அதற்கு பிறகு அட்லீயின் மேனேஜர் மற்றும் ஏஜிஎஸ் நிறுவனத்தின் மேனேஜர் என்னிடம் பேசினார்கள். அப்போது இதை பெரிதுபடுத்த வேண்டாம்.
உங்களுடைய படத்தை கைவிட்டு விடுங்கள் என்று கூறினார்கள். அவர்களின் இந்த பேச்சு என்னை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதையடுத்து நான் நீதிமன்றத்தை நாடியுள்ளேன். இதுதொடர்பான வழக்கு 23-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
மேலும் ஏ.ஜி.எஸ் தயாரிப்பு நிறுவனத்துக்கும் விளக்கம் கேட்டு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
எனது நெருங்கிய நண்பர் வழியாகத் தான் இந்தக் கதையின் கரு அட்லீக்கு கிடைத்துள்ளது. நடிகை அதிதிபாலனிடம் கூட இந்தக் கதையை கூறியிருக்கிறேன்” என்றார்.
சர்காரை தொடர்ந்து தற்போது இந்த படமும் கதைத் திருட்டு விவகாரத்தில் சிக்கியிருப்பதால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.