ஹைதராபாத்: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பழங்குடியின மக்களுடன் சேர்ந்து நடனமாடிய செய்தி, அனைவரிடத்திலும் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அவர் பழங்குடியின மக்களுடன் இயல்பாக பழகி, நடனம் ஆடியது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் கடந்த சில நாட்களுக்கு முன்பு, தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள்தான், தெலங்கானா மாநில முதல் பெண் ஆளுநர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக தமிழிசை சவுந்தரராஜன், தமிழக பாஜக தலைவராக இருந்த போதே மிகவும் எளிமையாக இருந்து வந்தவர். தற்போது தெலுங்கானா ஆளுநர் ஆன பின்பும் கூட அந்த குணத்தை கடைபிடிக்கிறார். இந்நிலையில் நேற்று தமிழிசை, தெலுங்கானா ஆளுநர் மாளிகையில் பழங்குடியின மக்களுடன் ஆலோசனை நடத்தினார்.
பழங்குடியின மக்களுக்கு செய்ய வேண்டிய வளர்ச்சி திட்டங்கள், இடஒதுக்கீடு, நிதி ஒதுக்கீடு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் போன்றவை குறித்து ஆலோசனை நடைபெற்றது. ஆலோசனை முடிந்த பிறகு, பத்ராச்சலம் மற்றும் நாகர்கர்ணூல் மாவட்டங்களில் இருந்து வந்திருந்த கோயா மற்றும் லம்பாடா மக்களுடன் உரையாடிய தமிழிசை, பின் அவர்களுடன் சேர்ந்து கோயா இன மக்களின் பாரம்பரிய இசைக்கு ஏற்றபடி நடனம் ஆடினார்.
இந்நிலையில் பழங்குடியின மக்களுடன் சேர்ந்து இயல்பாக பழகி, நடனம் ஆடியது அனைவரையும் கவர்ந்து வருகிறது. மேலும் தன் கல்லூரி காலத்தில் பழங்குடியின மக்களுக்கு செய்த மருத்துவ உதவிகள் போன்ற பல விஷயங்களை அவர்களிடம் பகிர்ந்து கொண்டார். இந்நிலையில் தெலுங்கானா மக்கள், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அணுகுவதற்கு மிகவும் எளிதாக இருக்கிறார் என்று பாராட்டி வருகின்றனர்.