TamilNadu Scheme for Ramanathapuram District
TamilNadu Scheme for Ramanathapuram District

TamilNadu Scheme for Ramanathapuram District : ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்காக இதுவரை செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் என்னென்ன என்பது குறித்த அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

இராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. தமிழகம், இந்தியா மட்டுமன்றி, உலகளவில் வரலாற்றுச் சிறப்புமிக்க, முக்கிய புனிதத்தலமாக விளங்கக்கூடிய இராமேஸ்வரத்திலுள்ள அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு ஆண்டுதோறும் ஒரு கோடிக்கும் மேலான பக்தர்கள் வருகை தந்து பிரார்த்தனை செய்கிறார்கள்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் வேளாண் தொழில், மீன்பிடித் தொழில் ஆகிய இரண்டு தொழில்களும் பிரதான தொழில்களாக விளங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த இரண்டு தொழில்களுக்கும் முன்னுரிமை கொடுக்கும் அரசாக அம்மாவின் அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது.

வேளாண் பெருமக்களுக்கு பல்வேறு திட்டங்கள் அம்மாவின் அரசால் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. வறட்சியான பகுதிகளில் வாழும் மக்களுக்கு, கோடை காலத்திற்குத் தேவையான நீர் கிடைக்க கூடிய சூழ்நிலை குடிமராமத்து என்னும் சிறப்பான திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு அம்மாவின் அரசால் குடிமராமத்து திட்டம், கிராமப்பகுதிகளில் இருக்கின்ற ஏரிகள், குளங்கள், குட்டைகள் மற்றும் ஊரணிகளில் பொதுப்பணித் துறையின் கீழ் வருகிற நீர்நிலைகளை பொதுப்பணித் துறையும், ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் வருகிற நீர்நிலைகளை ஊராட்சி ஒன்றியங்களும், முழுக்க முழுக்க விவசாயிகளின் பங்களிப்புடன் வெற்றிகரமாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் கடந்த மூன்று ஆண்டுகளில் ரூபாய் 48.50 கோடி மதிப்பீட்டில் விவசாய பங்களிப்போடு 94 குடிமராமத்துப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. 2020-21ஆம் ஆண்டு ரூபாய் 31 கோடி மதிப்பீட்டில் 44 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு 70 சதவிகிதப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. குடிமராமத்து திட்டத்தின் மூலம் பருவகாலங்களில் பொழிகின்ற மழை நீர் ஒரு சொட்டு கூட வீணாக்காமல் ஏரிகளில் சேமித்து வைக்கப்பட்டு, கோடை காலத்தில் வேளாண்மைக்கும், குடிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

அதே போல், நதிகள் மற்றும் ஓடைகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதற்கு மாண்புமிகு அம்மாவின் அரசு மூன்று ஆண்டு காலத் திட்டம் வகுத்து, ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தடுப்பணைகள் கட்டி, மழை காலத்தில் பொழிகின்ற நீரை சேமித்து நிலத்தடி நீர் உயர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ரூபாய் 70.54 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் தமிழக முதல்வர்.!!(Opens in a new browser tab)

நபார்டு நிதியுதவியுடன் மண்டபம் ஒன்றியம், சாந்தப்பகோன் வலசை கிராமம், மன்னார் வளைகுடா கடலோரப் பகுதியில் ரூபாய் 11.15 கோடி மதிப்பீட்டில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆர்.எஸ்.மங்கலம் வட்டம், ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயை ரூபாய் 18.82 கோடி மதிப்பீட்டில் நவீனப்படுத்தும் பணி துவங்கப்படவுள்ளது. இராமநாதபுரம், பெரிய கண்மாய்க்கு நீர்வரத்து பெறுவதற்கு வைகை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள தலைமதகில் ரூபாய் 10.50 கோடி மதிப்பீட்டில் கூடுதல் நீர்போக்கி அமைக்கும் திட்டம் அரசின் பரிசீலனையில் இருக்கின்றது.

பரமக்குடி, செவ்வூர் கிராமத்தில் வைகை ஆற்றின் குறுக்கே ரூபாய் 8.50 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. பரமக்குடி வட்டம், சூடியூர் கிராமத்தில் வைகை ஆற்றின் குறுக்கே ரூபாய் 8.50 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கும் திட்டம் அரசின் பரிசீலனையில் இருக்கின்றது.

இது போன்ற பல திட்டங்கள் அம்மா அரசின் பரிசீலனையில் இருக்கின்றது. இத்திட்டங்கள் நிறைவேறும் போது மழைக்காலங்களில் பொழிகின்ற நீர் வீணாகாமல் ஆங்காங்கே தடுப்பணைகள் மூலமாக சேமித்து வைக்கப்பட்டு நிலத்தடி நீர் செறிவூட்டப்படும்.

மாண்புமிகு அம்மாவின் அரசால், இந்த மாவட்ட மக்களின் நலன் கருதி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ரூபாய் 345 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டு வருகிறது. இது வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டம். இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் ஆசியோடு, தமிழகம் முழுவதும் 11 அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளை அமைக்கும் பணிகள், மத்திய அரசின் அனுமதி பெற்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எந்த மாநிலத்திலும் ஒரே நேரத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளைப் பெற்ற வரலாறு கிடையாது. அந்த வரலாற்றையும் மாண்புமிகு அம்மாவின் அரசு படைத்துள்ளது. இந்த மருத்துவக் கல்லூரிப் பகுதியில் நவீன மருத்துவமனை உருவாக்கப்படுகிறது. இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ஏழை, எளிய மக்களுக்கு தரமான சிகிச்சை அளித்து நன்மை பயக்கும் ஒரு அற்புதமான திட்டத்தை மாண்புமிகு அம்மாவின் அரசு துவக்கியுள்ளது.

கீழக்கரை, குதக்கோட்டை கிராமத்தில் புதிய சட்டக் கல்லூரிக்கு கட்டடம் கட்டும் பணி ரூபாய் 76.61 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றது. அதுமட்டுமல்லாமல் 4 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை இந்த மாவட்டத்திற்கு கொடுத்துள்ளோம். மேலும், நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தி, ஏழை, எளிய மக்கள் உயர்கல்வி பயில வழிவகை செய்த அரசு அம்மாவின் அரசு என்பதை பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன்.

இராமேஸ்வரத்தில் யாத்ரீகர்கள் தங்கும் விடுதி கட்டும் பணி சுமார் ரூபாய் 30.96 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றது. இப்பணி விரைந்து முடிக்கப்பட்டு பக்தர்கள் தங்குவதற்குண்டான வசதி உருவாக்கித் தரப்படும். மாண்புமிகு அம்மாவின் அரசு, மீனவர்களின் நலனுக்காக, மீனவர்களின் நீண்டகாலக் கோரிக்கைகளான, ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளை கையாள்வதற்கு இராமநாதபுரம், மூக்கையூர் கிராமத்தில் ரூபாய் 128.70 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி துறைமுகம் கட்டி முடிக்கப்பட்டு 4.3.2019 அன்றும், குந்துக்கலில் ரூபாய் 70 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி இறங்குதளம் கட்டி முடிக்கப்பட்டு 19.9.2020 அன்றும் பயன்பாட்டிற்கு நான் துவக்கி வைத்தேன். மத்திய, மாநில அரசுகள் இணைந்து மானிய விலையில் ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் வழங்க வேண்டுமென்ற மீனவர்களின் கோரிக்கை அம்மாவின் அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்காக, ஒரு படகின் விலையான ரூபாய் 80 இலட்சத்தில், மத்திய அரசு 50 சதவிகிதம், மாநில அரசு 20 சதவிகிதம் என ரூபாய் 56 இலட்சம் மானியமாக தரப்படுகிறது. எஞ்சிய தொகையை மீனவர்கள் தங்கள் சொந்த நிதி மற்றும் வங்கியின் மூலமாகப் பெற்றுக் கொள்ளலாம்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் 22 ஆழ்கடல் மீன்பிடி படகுகள் ரூபாய் 17.6 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்காக 70 சதவிகித மானியமாக ரூபாய் 12.35 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும், 232 பயனாளிகளுக்கு படகு கட்ட ஆணை வழங்கப்பட்டுள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அதிக நிவாரணம் முதன்முதலில் வழங்கிய அரசு அம்மாவின் அரசு தான். இராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், கடந்த 4 ஆண்டுகளில் 3,50,220 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூபாய் 1,316.63 கோடி வழங்கப்பட்டுள்ளது.

2016-2017ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடும் வறட்சியின் காரணமாக, இராமநாதபுரம் மாவட்டத்தில் 1,40,636 விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரண உதவித்தொகையாக ரூபாய் 146 கோடி வழங்கப்பட்டுள்ளது.

இராமநாதபுரம், இராஜசிங்கமங்கலம் மற்றும் எட்டிவயல் ஆகிய இடங்களில் சந்தை உட்கட்டமைப்பு வசதிகள் ரூபாய் 22 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. 847 வேளாண் இயந்திரங்கள் 13 கோடியே 15 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது.

காய்கறிகள் மற்றும் பழங்கள் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்காக, விநியோகத் தொடர் மேலாண்மைத் திட்டத்தின்கீழ், பரமக்குடி, முதுகுளத்தூர் மற்றும் கமுதிய¨ல் 10 கோடியே 58 இலட்சம் ரூபாய் செலவில் முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள்அமைக்கப்பட்டுள்ளன.

கூட்டுப்பண்ணையத் திட்டத்தின் கீழ், கடந்த மூன்றாண்டுகளில், 205 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டு மூலதன நிதியாக 10 கோடியே 25 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டு, அதன் மூலம் 990 பண்ணை இயந்திரங்கள் வாங்கப்பட்டு, 20 ஆயிரத்து 500 சிறு, குறு விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். 2020-21 ஆம் ஆண்டிலும் 2 கோடியே 50 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு 50 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள்
அமைக்கப்படவுள்ளன.

நுண்ணீர் பாசனத் திட்டத்தில், கடந்த 4 ஆண்டுகளில் 7 கோடியே 59 இலட்சம் ரூபாய் மானியத்தில் நுண்ணீர் பாசன அமைப்புகள் 7 ஆயிரத்து 175 ஏக்கரில் நிறுவப்பட்டுள்ளது. 2020-21ஆம் ஆண்டிற்கு இத்திட்டத்திற்காக 7 கோடியே 94 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் சேமிப்பு கிடங்குகள் மற்றும் அலுவலகக் கட்டடங்கள் ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது.

தரமான இடுபொருட்களை இருப்பு வைத்து, விநியோகிக்கும் வகையில், 4 ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்களும், 3 துணை வேளாண்மை விரிவாக்க மையங்களும் 6 கோடியே 90 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளன.

மேலும், 4 ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள் 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகின்றன.

அதேபோல், விவசாயிகளுக்கு சூரிய சக்தி பம்புகள் மானிய விலையில் கொடுக்கப்பட்டுள்ளன. இராமநாதபுரம் மாவட்டத்தில் உணவுப் பூங்கா அமைப்பதற்கும், வனக்குடி தொழிற் பூங்கா, சக்கரக்கோட்டை தொழிற் பூங்கா அமைப்பதற்கும் மாண்புமிகு அம்மாவின் அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இராமநாதபுரம் போன்ற பின்தங்கிய பகுதிகளில் தொழில் நிறுவனங்களை உருவாக்க வேண்டுமென்று அம்மாவின் அரசு நீண்டகால திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இப்படி தென்மாவட்டங்களில், குறிப்பாக பின்தங்கிய மாவட்டங்களில் புதிய தொழில்கள் துவங்குபவர்களுக்கு பல்வேறு சலுகைகளை அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது.

தொழிற்சாலைக்கான நிலத்தில் 50 சதவீதம் மானியமாக கொடுக்கிறது. அதுமட்டுமல்லாமல், தொழிற்சாலைகளுக்கு அனைத்து அனுமதிகளும் உடனடியாக வழங்கப்படுகிறது. தென் மாவட்டங்களில் குறிப்பாக பின்தங்கிய மாவட்டங்களில் புதிய தொழில் துவங்குவதற்கு எல்லா வகையிலும் முன்னுரிமை கொடுக்கும் அரசு அம்மாவின் அரசு. இதனால், தென் மாவட்டங்களில் இருக்கும் மக்கள், குறிப்பாக இராமநாதபுரம் மாவட்டம் போன்ற மாவட்டங்களில் புதிய தொழில்கள் வரும்பொழுது, இங்குள்ள படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும்.

வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டமான காவேரி-குண்டாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் துவங்கப்பட்டு விட்டன. இதன் மூலம், இராமநாதபுரம் மாவட்டத்தில் 1 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதியைப் பெறும். காவேரி ஆற்றில் மேட்டூர் அணையிலிருந்து உபரிநீராக வெளியேறி கடலில் கலக்கின்ற நீரை வறட்சியான பகுதிகளுக்கு கால்வாய் வெட்டி திருப்பி விடுவதன் மூலம் வறட்சியான பகுதிகளிலுள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள் நிரப்பப்பட்டு, நிலத்தடி நீர் செறிவூட்டப்பட்டு, கோடை காலங்களில் வேளாண் பெருமக்களுக்கும், குடிப்பதற்கும் நீர் கிடைக்கும். மாண்புமிகு அம்மா அவர்களால் அறிவிக்கப்பட்ட அந்தத் திட்டத்தை பல்லாயிரக்கணக்கான செலவில் அம்மாவின் அரசு செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.

காவேரி முதல் குண்டாறு வரை 259 கிலோமீட்டர் நீளமுள்ள கால்வாய் வெட்டப்பட வேண்டும். பகுதி-1ல் காவேரி முதல் தெற்கு வெள்ளாறு (118 கிலோ மீட்டர்) வரை. பகுதி-2ல் தெற்கு வெள்ளாறு முதல் வைகை (108 கிலோ மீட்டர்) வரை. பகுதி-3ல், வைகை முதல் குண்டாறு (33 கிலோ மீட்டர்) வரை. பகுதி-1க்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கரூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் நில எடுப்பு செய்வதற்கு அரசாணை வழங்கப்பட்டு, வருவாய்த் துறையில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, நில எடுப்புப் பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.

இந்த நிதியாண்டில், காவேரி – வைகை – குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு ரூபாய் 700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது கட்டம் பகுதி-2 செயல்படுத்தும்பொழுது, இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பயன்பெறும். காவேரி-வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாயானது மானாமதுரை வட்டம், இடைக்காடு கிராமத்தில் வைகை நதியை கடந்து செல்கிறது. இவ்விடத்தில் 1,500 கனஅடி நீரை வைகை நதியில் திருப்ப உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இராமநாதபுரம் மாவட்டத்திலிருக்கின்ற கண்மாய்கள், ஏரிகள், குளங்கள், ஊரணிகள், குட்டைகள் அனைத்தும் நிரப்பப்படும். இத்திட்டத்தின் மூலம் நான் ஏற்கனவே கூறியதைப் போல 1 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு பாசன வசதி பெறும்.

இத்திட்டத்திற்கு தோராயமாக ரூபாய் 14,000 கோடி செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை, இவ்வளவு அதிக செலவில் தமிழகத்தில் எந்தத் திட்டமும் நடைபெறவில்லை. இவ்வளவு செலவு செய்து, வேளாண் பெருமக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றுகின்ற ஒரே அரசு அம்மாவின் அரசுதான். பலர், விவசாயிகளுக்கு என்ன செய்தார்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நான் ஏற்கனவே தெளிவு படுத்தியிருக்கிறேன்,

நான் ஒரு விவசாயி. விவசாயி குடும்பத்தில் பிறந்து, விவசாயியாக இருக்கின்ற காரணத்தால்தான் விவசாயிகள் படுகின்ற கஷ்டங்கள், துன்பங்கள் நன்றாக உணர்ந்து, அந்த விவசாயிகளுடைய துன்பங்களை களைய வேண்டுமென்பதற்காகத்தான் எவ்வளவு செலவானாலும் அதை நிறைவேற்ற வேண்டுமென்றுதான் காவேரி – வைகை – குண்டாறு இணைப்பு திட்டத்தை அறிவித்து, செயல்படுத்த இருக்கின்றோம் என்பதைக் குறிப்பிட விரும்புகின்றேன்.

மாண்புமிகு அம்மாவின் அரசு மக்களுடைய அரசு, வேளாண் பெருமக்களுடைய அரசு, ஒட்டுமொத்த தமிழ் மக்களுடைய எண்ணங்களை நிறைவேற்றுகின்ற அரசு, அனைத்துத்தர மக்களுக்கும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

இராமநாதபுரம் மாவட்டத்தைப் பொறுத்தவரை, ஆரம்பத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு அரசு அறிவித்த ஆலோசனைகளை ஏற்று சிறப்பாக செயல்பட்டதன் காரணத்தால், இந்நோய்ப் பரவல் படிப்படியாக குறையத் தொடங்கியிருக்கிறது.

ஆரம்பத்தில், இந்த நோய்ப் பரவலைத் தடுப்பதற்கு நாம் கடுமையாக பல நடவடிக்கைகளை எடுத்தோம். ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தோம். இதன்மூலம் நோய் தொற்றுப் பரவல் தடுக்கப்பட்டது. அதனால்தான் இன்றைக்கு கொரோனா தொற்றுப் பரவல் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் குறைவாக இருக்கிறது.

இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. இந்த நோய்த் தொற்று எவ்வாறு பரவுகிறது என்று யாருக்கும் தெரியவில்லை. அப்படிப்பட்ட ஒரு கொடிய நோய் இது. இந்நோய்ப் பரவலைத் தடுப்பதற்கு, அரசு கடுமையான முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருகிறது.

மருத்துவ நிபுணர்கள் கூறுகின்ற ஆலோசனைகளின்படி அந்த மாவட்ட நிர்வாகத்திற்கு ஆலோசனைகளை வழங்கியதன் மூலமாக அந்தந்த மாவட்ட நிர்வாகம் அதற்கேற்றவாறு செயல்பட்டதன் விளைவாக இராமநாதபுரம் மாவட்டத்தில் இந்நோய்ப் பரவல் படிப்படியாக குறையத் தொடங்கியிருக்கிறது.

இன்னும் குறுகிய காலத்தில், இந்த எண்ணிக்கைகளை குறைத்து, இந்நோய் தொற்றுப் பரவல் தடுக்கப்பட்டு இயல்பு நிலைக்கு வருவதற்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதோடு, தமிழ்நாடு முழுவதும் இந்த நோய்ப் பரவல் படிப்படியாக குறையத் தொடங்கியிருக்கிறது.

கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் ரூபாய் 6650 கோடி செலவு – சுதந்திர தின விழாவில் முதல்வர் தகவல்

இந்திய அளவில், மற்ற மாநிலங்களில் இந்நோய்ப் பரவல் அதிகமாக இருந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் தான் இந்நோய்ப் பரவல் குறைந்து கொண்டிருக்கிறது. RTPCR Test மூலம் தான் இந்த நோயை துல்லியமாக கண்டுபிடிக்க முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறிய ஆலோசனையின்படி, Test செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில்தான் அதிகமான எண்ணிக்கையில், அதாவது நாள் ஒன்றுக்கு 85,000 பரிசோதனைகள் எடுக்கிறோம். தமிழ்நாட்டில் அதிகமான பரிசோதனைகள் மேற்கொண்டதன் விளைவாக இந்நோய்த் தொற்று படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது.

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது, தமிழ்நாட்டில் தான் இறப்பு சதவிகிதம் குறைவாக உள்ளது.

மாண்புமிகு அம்மாவின் அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவல் தடுக்கப்பட்டு, குறையத் தொடங்கியுள்ளது. குறுகிய காலத்தில் இயல்பு நிலைக்குத் திரும்புவோம் என்று நம்புகிறோம்.

வேளாண் பெருமக்களுக்கும், சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்களுக்கும் 100 சதவிகித தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. எனவே, தொழில் புரிபவர்களுக்கு எந்தவித சிரமமும் இல்லாமல் 100 சதவிகித தொழிலாளர்களை வைத்துப் பணிபுரிய மாண்புமிகு அம்மாவின் அரசு உத்தரவு வழங்கியுள்ளது.

அதேபோல, எந்த ஆண்டும் இல்லாத அளவில் அதிகமான நெல் விளைச்சல் இந்த ஆண்டு கிடைத்துள்ளது. இதற்கு அம்மாவின் அரசு எடுத்த நடவடிக்கைகள் தான் காரணம்.

வேளாண் துறை அதிகாரிகள் குறிப்பிட்ட நேரத்தில் அந்தந்தப் பகுதிகளில் இருக்கின்ற விவசாயிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்த காரணத்தால் அதிக விளைச்சல் பெறப்பட்டுள்ளது.

இதற்கு வேளாண் துறை அதிகாரிகளை பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். தொழில் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, பொதுப்பணித் துறை போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் சிறப்பான நடவடிக்கைகள் எடுத்த காரணத்தால் அனைத்துத் துறைகளிலும், மற்ற மாநிலங்களைக் காட்டிலும், அதிக வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது என்ற செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.