Tamil Nadu : அடுத்தடுத்து தமிழகத்தில் நிலவி வரும் இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழக சட்டப்பேரவை நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது. இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடக்க உரையாற்றுகிறார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் வாரம் அல்லது 2வது வாரத்தில் தமிழக சட்டபேரவை கூட்டம் கூடும். இந்நிலையில் இந்த ஆண்டின் (2019ம் ஆண்டுக்கான) முதல் சட்டப்பேரவை கூட்டம் நாளை நடைபெற உள்ளது.
நாளை காலை 10 மணிக்கு தலைமை செயலகத்தில் உள்ள சட்டமன்ற பேரவை மண்டபத்தில் கூட்டம் நடைபெறும் என்றும், கூட்டம் தொடங்கியதும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரை நிகழ்த்துவார் என்றும் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
மேலும், சட்டப்பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்தலாம் என்பதை குறித்து ஆலோசனை செய்து,வேண்டுமானால் நாளை மறுதினம் (3- ம் தேதி) சட்டப்பேரவை மீண்டும் கூட்டப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சட்டபேரவை கூட்டம் கூடும் அந்த தினத்தில் மறைந்த திமுக தலைவரும் திருவாரூர் தொகுதி எம்எல்ஏவுமான மு.கருணாநிதி அவர்களின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்படும்.
மேலும் அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து பேசுவார்கள்.
அதோடு இந்த கூட்டத் தொடரில் மேகதாது அணை விவகாரம், ஸ்டெர்லைட் ஆலை, ஆசிரியர்கள் போராட்டம், விவசாய நிலங்களில் மின் கோபுரம் அமைக்கும் விவகாரம் போன்ற பல்வேறு மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அப்போலோ மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மீது தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும் சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாளை காலை சட்டப்பேரவையில் ஆளுநர் ஆங்கிலத்தில் உரையாற்றி முடித்ததும், அவரது உரையை சட்டப்பேரவை தலைவர் தனபால் தமிழில் படிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.