Tamilisai Soundararajan :
தூத்துக்குடி: ஆயிரம் தாமரை மொட்டுக்களே என்று பாட்டு பாடி சினிமாவில் கூட அப்பொழுதே தாமரையை மலர வைத்தவர்தான் நடிகர் கார்த்திக் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
வரும் லோக்சபா தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடுகிறார்.
மேலும் தூத்துக்குடியில் திமுக கூட்டணி சார்பாக திமுக ராஜ்யசபா எம்.பி கனிமொழி போட்டியிடுகிறார்.இந்நிலையில் இவ்விருவருக்கும் இடையில் மிக கடுமையான போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில் இந்த தேர்தலில் நடிகர் கார்த்திக் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க போவதாக தெரிவித்துள்ளார்.
எனவே மக்கள் உரிமை காக்கும் கட்சி நிறுவனர் நடிகர் கார்த்திக் தமிழிசை சௌந்தரராஜனுக்காக பிரச்சாரம் செய்து வருகிறார்.
இதையடுத்து கோவில்பட்டி மற்றும் அதனை சுற்றி இருக்கும் பகுதிகளில் கார்த்திக், தமிழிசைக்காக பிரச்சாரம் செய்தார்.
பிரச்சாரத்தில் தமிழிசை- ஐ ஆதரித்து பேசுகையில், ‘கருப்பு பணத்தை ஒழிக்கவேண்டும். ஆனால் அதற்கான சக்தி எதிர்க்கட்சிகளுக்கு கிடையாது. அது தற்போது பாஜக கூட்டணியிடம் மட்டுமே இருக்கிறது.
நாம் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும், நாடு முன்னேற வேண்டும். அப்படி நடக்க வேண்டும் என்றால், நாம் நல்லவரை தேர்வு செய்ய வேண்டும்’ என்று பேசினார்.
இதையடுத்து அதே பிரச்சாரத்தில் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், பாஜக கூட்டணி மிகவும் வலிமையாக இருக்கிறது.
லோக்சபா தேர்தலில் பாஜக மிகவும் வலுவான வெற்றியை பெற்று ஆட்சியை அமைக்கும் என்று கூறினார்.
மேலும் தூத்துக்குடி வரை வந்து எனக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வந்த சகோதரர் மற்றும் நண்பர் கார்த்திக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என நடிகர் கார்த்திக்- க்கு நன்றி தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய தமிழிசை, “தாமரைக்கு வாக்கு கேட்க வந்திருப்பதற்கு அவர் மிக பொருத்தமானவர்.
தமிழகத்தில் தாமரையை அவர் ஏற்கனவே மலர செய்தவர். சினிமாவில் ஆயிரம் தாமரை மொட்டுக்களே என்ற பாடல் மூலம் தாமரையை ஏற்கனவே மலரச் செய்தவர்தான் நடிகர் கார்த்திக்” என்று நகைச்சுவையுடன் கூறினார்.