Tamilisai praises EPS – சென்னை: ஏழைகளின் வயிற்றில் பால் வார்க்கும் தமிழக முதல்வர் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை தொழிலாளர்களுக்கு தலா ரூ 2 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் அறிவித்துள்ளார்.
அதன்படி விவசாய தொழிலாளர்கள், நகர்ப்புற ஏழைகள், பட்டாசு மற்றும் மீன்பிடி தொழிலாளர்கள், விசைத்தறி மற்றும் கைத்தறி தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள், சலவை தொழிலாளர்கள், உப்பள தொழிலாளர்கள், காலணி மற்றும் துப்புரவு தொழிலாளர்கள், மண்பாண்ட தொழிலாளர்கள், கைவினைஞர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு இந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் சிறப்பு நிதி உதவியாக தலா 2,000 ரூபாய் வழங்கப்படும்.
இதன் மூலம் கிராமப்புறத்தில் 35 லட்சம் ஏழை குடும்பங்களும் நகர்ப்புறத்தில் 25 லட்சம் குடும்பங்களும் பயன்பெறும் என முதல்வர் அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் இந்த அறிவிப்பை பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பாராட்டியுள்ளார்.
தமிழிசை அவரது டுவிட்டரில் இது குறித்து கூறுகையில், ‘ஏழைகளின் வயிற்றில் பால் வார்க்கும் தமிழக முதல்வர்! ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணும்(?) முதல்வருக்கு பாராட்டுக்கள் என தெரிவித்துள்ளார்!’ .
இதனை அதிமுக- பாஜக இரு கட்சிகளும் திரை மறைவில் கூட்டணி பேரம் பேசிவருவதாகவும், அதிமுகவினர் பாஜகவினரை பாராட்டுவதும், பாஜகவினர் அதிமுகவினரை பாராட்டுவதும் நடந்து வருவதாகவும் அரசியல் பார்வையாளர்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.