Tamil Nadu Rain : தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.
இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது, ” தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, குமரி கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை வரை நீடிக்கிறது.
மேலும், அதே பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி ஒன்றும் நிலவி வருகிறது.
இதன் காரணமாக, கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது மற்றும் உள் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தெற்கு உள் தமிழகத்தில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த வானிலை மாற்றத்தால் அடுத்த 2 நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும், டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலோர பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை இருக்கும். சென்னையை பொருத்த வரை மழை இல்லை, வறண்ட வானிலை காணப்படும்” இவ்வாறு தெரிவித்தனர்.