என் வாழ்நாளில் அதிகம் அழைத்த நண்பனின் பெயர் வெங்கட் என வெங்கட் சுபா மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் டி சிவா.

T Siva Condolences to Venkat Suba Death : தமிழ் சினிமாவிலும் சின்னத்திரையிலும் பிரபல நடிகராக வலம் வந்தவர் வெங்கட் சுபா. இந்தியாவில் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவருடைய மறைவிற்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தயாரிப்பாளர் டி சிவா அவர்கள் வெங்கட் சுபா உடனான நட்பு குறித்து ‌‌பேசியுள்ளார்.

வெங்கட்.. வெங்கட்.. வெங்கட் என் வாழ்நாளில் நான் அதிகம் அழைத்த நண்பனின் பெயர். 36 வருடங்கள் ஆயிரமாயிரம் நினைவுகள், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வெற்றியிலும் தோல்வியிலும் உடன் இருந்தவன். அறிவாளி, எழுத்தாளன், படைப்பாளி, நடிகன், விமர்சகன் என ஒரு மினி சகலகலா வல்லவன். யார் சொல்லி கேட்காவிட்டாலும் நான் சொன்னால் கேட்பான் ஆனால் தடுப்பூசி போட்டுக்கொள்ளச்சொல்லி நான் சொல்லியும் ஊர் உறவு சொல்லியும் கேட்கவில்லை.அதுதான் ஆஜாணுபாகுவாக ஆரோக்யமாக இருந்த உன்னை கண்ணுக்கு தெரியாத ஒரு கிருமி எங்களிடமிருந்து பிரித்துவிட்டது மட்டுமல்ல உன் எதிர்கால படைப்புகளை திட்டங்களை கனவுகளையும் அழித்து விட்டது.

சினிமா மீதுதான் எத்தனை காதல் உனக்கு ஆதாயமே இல்லாமல் இதையே சுற்றி சுற்றி வந்து சேவை செய்தாய். நட்பே வாழ்க்கை என நண்பர்களை சுற்றியே வாழ்ந்தாய். நட்பும் தமிழ் சினிமாவும் என்றும் உன்னை மறவாது நண்பனே. கொரோனாவுக்கு என் உடன் பிறந்த சகோதரணை பறி கொடுத்தேன் இன்று உடன்பிறவா சகோதரன் உன்னையும் பறி கொடுத்துவிட்டேன். வெங்கட், மறக்க முடியாதடா உன்னை. மன்னித்துவிடு வெங்கட்டா இந்த கொரானாவை எதிர்த்து உன்னை காப்பாற்ற உன் மனைவியும் உறவுகளும் நண்பர்களும் நீ நேசித்த மொத்த தமிழ் சினிமாவும் உனக்காக அப்போலோ மருத்துவமனைக்கு தொடர்பு கொண்டு போராடியது ஆனாலும் உன்னை மீட்க முடியவில்லையடா வெங்கட்.

கொரோனா காலத்திலும் கடுமையாக உழைத்து விட்டாய் வெங்கட் தெய்வத்தின் திருவடியில் நீ இளைப்பாரு உன்னை தினம் தொட்டு வணங்கி கொள்கிறேன் என கூறியுள்ளார்.