ஆஸ்கார் விருதின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள சூரியாவை பாராட்டி மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார். இதற்கு நெகிழ்ச்சியுடன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதில் அளித்துள்ளார் சூர்யா.

திரையுலகில் மிகப்பெரிய விருதுகளில் முக்கியமான ஒன்றுதான் “ஆஸ்கார் விருது”. இந்த விருது நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த ஆஸ்கார் விருதின் உறுப்பினர் குழுவில் உலகம் முழுவதும் இருந்து நான்காயத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் இருக்கின்றனர். மேலும் இந்த ஆஸ்கார் கமிட்டியின் உறுப்பினர்கள் பற்றிய விவரம் ஆண்டு தோறும் மாறுபட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு ஆஸ்கர் விருது உறுப்பினர் குழுவில் புதிதாக 397 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் இந்தியாவில் இருந்து ‘நடிகர் சூர்யா மற்றும் நடிகை கஜோல்’ ஆகிய இருவரும் குழுவில் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த ஆஸ்கார் குழுவில் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் நடிகர் சூர்யாவை பாராட்டி தனது சமூக வலைதள பக்கத்தில் மு. க. ஸ்டாலின் அவர்கள் “தனது தேர்ந்த நடிப்பாற்றலுக்கும்; சமூக அக்கறை கொண்ட கதைத்தேர்வுகளுக்கும் மாபெரும் அங்கீகாரமாக, ஆஸ்கார் விருது தேர்வுக்குழுவில் இடம்பெற அழைப்பு பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற உலகப் பெருமையை அடைந்துள்ள தம்பி சூர்யா அவர்களுக்கு எனது பாராட்டுகள்! வானமே எல்லை!” என்று தெரிவித்திருந்தார்.

அதற்கு நடிகர் சூர்யா அவரின் ட்விட்டர் பக்கத்தில் தங்கள் வாழ்த்து மகிழ்ச்சி அளிப்பதோடு பொறுப்புணர்வையும் உணர்த்துகிறது. நல்ல படைப்புகளைத் தொடர்ந்து தர முயற்சிக்கிறேன்.. தங்கள் அன்புக்கு மனம் நிறைந்த நன்றிகள்.. என்று மன நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு இருக்கிறார். இந்தப் பதிவுகள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.