Subasree dead issue Petition filed by Jayagopal seeking bail – சென்னை: பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்த ஜெயகோபால் வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
சென்னை குரோம்பேட்டை, பவானி நகரை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் சுபஸ்ரீ (23). துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி வேலை முடித்து வழக்கம் போல அவரது ஸ்கூட்டியில் வீட்டிற்கு புறப்பட்டார்.
இந்நிலையில், பள்ளிக்கரணை ரேடியல் சாலையில் அதிமுக பிரமுகரான காஞ்சி கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ஜெயகோபால் மகன் திருமண பேனர் பல கிமீ தூரத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களை வரவேற்று வரிசையாக வைக்கப்பட்டிருந்தது.
பொங்கிய அதிமுக… பம்மிய விஜய்… சுபஸ்ரீ பற்றி பேசியதை கட் செய்த சன் டிவி..
அப்போது, குரோம்பேட்டை – துரைப்பாக்கம் ரேடியல் சாலை வழியாக சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ மீது, சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ராட்சத பேனரில் ஒன்று, திடீரென சரிந்து விழுந்தது.
இதில் ராட்சத பேனர் விழுந்ததால், நிலை தடுமாறிய சுபஸ்ரீ ஸ்கூட்டியில் இருந்து கீழே விழுந்தார். அச்சமயம் கோவிலம்பாக்கம் நோக்கி சென்ற தண்ணீர் லாரி ஒன்று கீழே விழுந்த சுபஸ்ரீ மீது மோதியது.
லாரியின் முன்பக்கம் சிக்கிய அவரது ஸ்கூட்டர் சில மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டது.
இதில் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் சுபஸ்ரீ பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக, வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர் சட்டவிரோத பேனர்களை வைத்தவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? அதை தடுக்க தவறிய அதிகாரிகள் மீது ஏன் துறைரீதியான நடவடிக்கை எடுக்கவில்லை? என்பது போன்ற கேள்விகள் எழுப்பினர்.
இந்த சம்பவம் தொடர்பாக, அனுமதி இன்றி பேனர் வைத்ததாக அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது மாநகராட்சி உதவி பொறியாளர் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜெயகோபால் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நிலையில் ஜெயகோபால் மீண்டும் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மேலும் ஜெயகோபாலின் உறவினரான மேகநாதனும் ஜாமீன் கோரி மனு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே இரண்டு பேரின் ஜாமீன் மனு, சென்னை ஐகோர்ட் நீதிபதி பி.புகழேந்தி முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.