Sterlite allowed – சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரி ஸ்டெர்லைட் ஆலை தொழிலாளர்கள், சென்னை சேப்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் சென்னையில் தற்சமயம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டால் ஆலைக்கு சீல் வைக்குமாறு அரசாணை பிறப்பிக்கப்பட்டு மூடப்பட்டது.
இந்த உத்தரவிற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தொடர்ந்த வழக்கில், சில நிபந்தனைகளுடன் ஆலையை மீண்டும் திறக்கலாம் என கடந்த மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.
எனவே ஆலையை மீண்டும் திறக்க அனுமதிப்பது குறித்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எடுக்கப்போகும் முடிவு குறித்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், “ஆலையை திறக்க வலியுறுத்தி ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள், 1,68,000 கோரிக்கை மனுக்களோடு சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் சென்னை சேப்பாக்கம் மைதானம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது” .
மேலும் ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள், ஏழைகளின் வாழ்வாதாரமாக உள்ள ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க வேண்டும் என்ற கோரிக்கை அம்மனுக்களை முன்வைத்துள்ளனர்.
வாகனத்தில் கொண்டு வரப்பட்டுள்ள அந்த 1,68,000 கோரிக்கை மனுக்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்ப அவர்கள் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டெர்லைட் தொழிலாளர்கள் மட்டுமின்றி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுவினர், ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்களின் உறவினர்கள், கிராம மக்கள், லாரி உரிமையாளர்கள்,
சிறு குறு தொழிலாளர்கள், பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் என நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.