SPB Ilaiyaraja Concert :
இளையராஜா இசையமைத்த 1000 படங்களில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
இதில் பெரும்பாலான பாடல்கள் தமிழர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவை. இப்படி பல சிறப்புகளை கொண்ட இந்த கூட்டணி இனி சேரப்போவதில்லை என அறிவித்தபோது அது ஒட்டுமொத்த திரை ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியாய் அமைந்தது.
சிவகார்த்திகேயன் படத்தில் இப்படியொரு ரோலில் நடிக்கிறாரா ஐஷ்வர்யா ராஜேஷ்?
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் எஸ்.பி.பி, திரைத்துறையில் தான் 50 ஆண்டுகளை நிறைவு செய்தததை கொண்டாடும் விதமாக உலகம் முழுக்க பயணித்து இசை கச்சேரி நடத்தினார்.
அப்போது இளையராஜாவின் பாடல்களை காப்புரிமை இல்லாமல் அவர் பாட கூடாது என இளையராஜா தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது இருவருக்குள்ளும் மனக்கசப்பை ஏற்படுத்தியது.
இதன் விளைவாக” இனி இளையராஜா பாடல்களை பாட மாட்டேன்” என எஸ்.பி.பி அறிவித்ததும் இசை பிரியர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த திரை ரசிகர்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதைதொடர்ந்து எஸ்.பி.பி, தன்னுடைய கச்சேரிகளில் மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் தான் பாடிய பாடல்களையே பாடி வந்தார்.
அதேபோல் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தயாரிப்பாளர் சங்கம் நடத்திய இசைஞானி 75 இசை விழாவிலும் எஸ்.பி.பி பங்கேற்க மறுத்தார்.
இப்படி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ராயல்டி விவகாரத்தில் பிரிந்திருந்த இந்த கூட்டணி, தற்போது மனக்கசப்பை மறந்து மீண்டும் ஒரே மேடையில் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் ஜூன் 2-ம் தேதி சென்னை ஈ.வி.பி அரங்கில் மிக பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி ஒன்று நடத்தப்படவுள்ளது.
இதில் இளையராஜாவுடன் பணியாற்றிய ஏராளமான ஜாம்பவான்கள் மீண்டும் அவருடைய இசைக்கு மேடையில் பாடவுள்ளனர். இந்த விழாவில்தான் இசைஞானியும் எஸ்.பி.பி-யும் மீண்டும் ரசிகர்கள் முன்னிலையில் தோன்றவுள்ளனர்.
மேலும் இதற்கான ஒத்திகைகள் வருகின்ற மே 22-ம் தேதி தொடங்கவிருப்பதாகவும் இதில் எஸ்.பி.பி-யை தவிர்த்து யேசுதாஸ், பாம்பே ஜெயஸ்ரீ, சுதா ரகுநாதன், உஷா உதூப், மனோ போன்ற பிரபலங்களும் பங்கேற்பதாகவும் அறிவித்துள்ளனர்.
கருத்து வேறுபாட்டால் இரண்டு ஆண்டுகள் பிரிந்திருந்த இரண்டு இசை மேதைகள் மீண்டும் ரசிகர்கள் முன்னிலையில் இணையவிருப்பதால் இவ்விழா மீது இசை ரசிகர்களிடம் தற்போதே மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.