School Teacher Attempted Suicide :
பல்லாவரம்: பல்லாவரம் அருகே அதிமுக பிரமுகர் கொலை மிரட்டல் விடுத்ததால் அரசுப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பல்லாவரம் – குன்றத்தூர் சாலை அருகே அனகாபுத்தூரில் அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது.
1- ஆம் வகுப்பு முதல் 12- ஆம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் சுமார் 1200 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். நேற்று காலை வழக்கம் போல் இந்த பள்ளி திறக்கப்பட்டதும், மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு வந்த வண்ணம் இருந்தனர்.
இந்நிலையில், அதே பள்ளியில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விலங்கியல் பாடம் நடத்தும் ஆசிரியர் கிருபானந்தம் (40) என்பவர் தனது அறையில் அமர்ந்திருந்தார்.
இவர், சக ஆசிரியர்களிடம், தன்னிடம் அதிமுக பிரமுகரும், இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவருமான முரளிதரன் (47) என்பவர் சுமார் 5 லட்சம் ரூபாய் கடனாக வாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டார்.
மேலும் கடந்த வெள்ளிக்கிழமை மாலை கடனை திருப்பிக் கேட்டதால் தன்னை பொதுமக்கள் முன்னிலையில் அடித்து உதைத்து, கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் தனக்கு அவமானமாக உள்ளது. வெளியில் நடமாட முடியவில்லை என வேதனையுடன் கூறியுள்ளார்.
பின்னர் சிறிது நேரத்தில் ஆசிரியர் கிருபானந்தம் பள்ளியின் இரண்டாவது மாடிக்கு சென்று திடீரென அங்கிருந்து கீழே குதிக்க ஓடினார். இதனை கண்ட ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் சக ஆசிரியர்கள் அவரை துரத்திச் சென்று தடுத்தனர். அப்போது, ஆசிரியர் கிருபானந்தம் மயங்கி விழுந்தார்.
ஆட்சியை தக்க வைக்குமா அதிமுக? – பரபரப்பான தேர்தல் எண்ணிக்கை நிலவரம்.!
மயங்கி விழுந்த கிருபானந்தம் – ஐ உடனடியாக மீட்ட சக ஆசிரியர்கள், 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி, சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஆசிரியர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது குறித்து விசாரித்தனர்.
மேலும் அதிமுக பிரமுகர் முரளிதரனிடம் விசாரணை நடத்தச் சென்றபோது முரளிதரன் தலைமறைவானது தெரியவந்தது.
இதனிடையே நேற்று ஆசிரியர்களும், மாணவர்களும் ஆசிரியர் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக பிரமுகர் முரளிதரனை கைது செய்ய வலியுறுத்தி பள்ளிக்குள்ளேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் பல்லாவரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு தான் மிகவும் நெருக்கமானவர் என்று கூறிக்கொண்டு திரியும் மோசடி பேர்வழி அதிமுக பிரமுகர் முரளிதரன், தினமும் அனகாபுத்தூர் அரசுப் பள்ளி உள்ளே நுழைந்து, மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களுக்கும் தொடர்ந்து பல்வேறு வகைகளில் இம்சை கொடுத்து வந்துள்ளார்.
அவரை கைது செய்து கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.