Saina Nehwal
புதுடில்லி: ”கடந்த மூன்று ஒலிம்பிக்குடன் ஒப்பிடும்போது, டோக்கியோ போட்டி கடினமாக இருக்கும். சீன வீராங்கனைகளின் ஆதிக்கம் இருப்பதால் சவால் காணப்படும்,” என, இந்திய பாட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவல் தெரிவித்தார்.
இந்தியாவின் பாட்மின்டன் நட்சத்திரம் ,சாய்னா 29. இதுவரை மூன்று ஒலிம்பிக் போட்டியில் (2008- காலிறுதி, 2012- வெண்கலம், 2016- லீக் சுற்று) பங்கேற்றுள்ளார்.
நான்காவது ஒலிம்பிக்கில் பங்கேற்க (2020, டோக்கியோ) தயாராகி வருகிறார். இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய அணிக்கு இரண்டு இடம் தரப்படும். அடுத்த ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி அடிப்படையில், உலகத்தரவரிசையில் ‘டாப்-16’ இடத்திற்குள் இருந்தால் நேரடியாக தகுதி பெறலாம்.
இது குறித்து சாய்னா கூறியது: கடந்த மூன்று ஒலிம்பிக்குடன் ஒப்பிடும்போது, டோக்கியோ போட்டி கடினமாக இருக்கும். சீன வீராங்கனைகளின் ஆதிக்கம் இருப்பதால் சவால் அதிகமாக காணப்படும். எனது கவனம் ஒலிம்பிக்கிற்கு எப்படி தகுதி பெறுவது என்பதில் இல்லை.
இதற்கு முன், நடக்கவுள்ள தொடரில் சிறப்பாக செயல்படுவது, காயம் இல்லாமல் உடற்தகுதியை பின்பற்றுவதில் கவனமாக உள்ளேன். கடந்த 2016ல் முழங்கால் காயத்திற்காக ‘ஆப்பரேஷன்’ செய்தேன்.
இதன்பின், காமன்வெல்த் (தங்கம்), ஆசிய விளையாட்டில் (வெண்கலம்) அசத்தினேன். இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் தொடரிலும் கோப்பை வென்றேன். இந்த வெற்றி, காயம் இல்லாமல் தொடர்ந்து விளையாட முடியும் என்ற நம்பிக்கையை தந்துள்ளது.
டென்னிசில் மொத்தமே நான்கு கிராண்ட்ஸ்லாம் தொடர்தான் நடத்தப்படுகிறது. இதைப்போல, குறைவான தொடர், அதிகமான பரிசுப்பணம் என்ற விதியை சர்வதேச பாட்மின்டன் கூட்டமைப்பு பின்பற்ற வேண்டும்.
அடுத்தடுத்த போட்டிகளில் விளையாட நாங்கள் ஒன்றும் ‘மெஷின்’ இல்லை. எங்களுக்கும் போதிய ஓய்வு தந்தால் மட்டுமே, உடற்தகுதியை கடைபிடிக்க முடியும். இவ்வாறு சாய்னா கூறினார்.