ஆட்சி மாறட்டும் அப்புறம் இருக்கு என்ன அரசு அதிகாரிகளை ராணிப்பேட்டை திமுக எம்எல்ஏ எச்சரித்ததாக கூறப்படும் சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
Ranipet DMK MLA Warning : ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனின், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பள்ளி நுழைவு வாயில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
துரைமுருகன் நிதி உதவியிலிருந்து கட்டியதாக துரைமுருகனின் பெயர் பள்ளியின் பெயரை விட பெரியதாக “நிதி உதவி துரைமுருகன் எம்.எல்.ஏ” என பொறிக்கப்பட்டிருந்ததற்குப் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் இதனால், அவரது பெயரை ஸ்டிக்கர் ஒட்டி மாவட்ட நிர்வாகம் மறைத்ததாக கூறப்படுகிறது.
பள்ளியைத் திறந்து வைக்க வந்த சட்டமன்ற உறுப்பினர்கள் காந்தி, நந்தகுமார் ஆகியோர் துரைமுருகன் பெயர் மீது ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பதைக் கண்டு ஆத்திரமடைந்து, திமுகவினரை ஏணியில் ஏற்றிவிட்டுப் பெயர் மீதுள்ள ஸ்டிக்கரை பிடித்துப் போக சொன்னதாகவும் பின் அந்த நுழைவாயிலைச் சட்டமன்ற உறுப்பினர் துரைமுருகன் அவர்கள் திறந்து வைத்தார் எனவும் கூறப்படுகிறது.
இந்த விழாவில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் இன்னும் சில மாதங்களில் ஆட்சி மாறும், அப்போது துரைமுருகனின் பெயர் மீது ஸ்டிக்கர் ஒட்டிய அரசு அதிகாரி வீட்டிற்கு போகத் தயாராக இருக்க வேண்டும், ”மீண்டும் ஸ்டிக்கர் ஒட்டி பெயரை மறைக்க மாவட்ட நிர்வாகத்திற்குத் தைரியம் இருக்கிறதா” என்று ஒருமையில் அரசு அதிகாரிகளை மேடையில் திட்டினார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏற்கனவே திமுக கட்சி குறித்து மக்கள் மத்தியில் சில அதிருப்தி உள்ள நிலையில் இச்சம்பவம், திமுக அடிமட்ட தொண்டர்களிடத்திலேயே முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்சியிலும் அதிகாரத்திலும் இல்லாத போதே திமுக இவ்வாறு அராஜக வேலையில் ஈடுபடுவதால், மக்களிடையே அதிருப்தி அதிகரித்து இருப்பதாக அப்பகுதி வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
மேலும், துரைமுருகன் பொதுச்செயலாளர் பதவிக்கு வந்ததும் அதிகாரத்தோரணையில் அடாவடி செய்வதாகவும் கட்சிக்குள்ளேயே ஒரு பேச்சு இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.