சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு இருப்பது அதிமுக கூட்டணிக்கு சாதகமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
Rajinikanth Fans Votes : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா வருவாரா என்று கடந்த 25 ஆண்டுகளாக இருந்த கேள்விக்கு ஜனவரி மாதம் இறுதியில் அவரே முற்றுப்புள்ளி வைத்தார். அதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக தனது நிலைப்பாட்டை அறிவிப்பேன் என்று அவர் தெரிவித்தார், சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக ரஜினி கூறிய இந்த கருத்து தமிழக அரசியலில் ஒரு விதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. வலதுசாரியாக இருந்தாலும் பாஜகவிற்கு அவருக்கும் எந்த தொடர்பும் இல்லையென அவர் தெளிவுபடுத்திவிட்டார். இந்நிலையில் தனியாக நின்றால் கிட்டத்தட்ட 10% வாக்குகளை எடுத்து இரு திராவிட கட்சிகளின் வாக்குகளை பிரிப்பார் என்று எடுக்கப்பட்ட பல்வேறு சர்வேக்கள் கூறியது. ஆனால் இது அத்தனைக்கும் ஒட்டுமொத்தமாக தனது உடல்நிலை பற்றி கூறி முற்றுப்புள்ளி வைத்தார் சூப்பர் ஸ்டார்.
இந்நிலையில் ரஜினிகாந்த் வைத்திருந்ததாக கூறப்பட்ட அந்த 8% முதல் 10% சதவிகிதம் வாக்குகள் யாருக்கு செல்லும் என்ற கேள்வி நீடித்து கொண்டே இருந்தது. இந்த நிலையில் மத்திய அரசு ரஜினிகாந்திற்கு கலைத் துறையின் உயரிய விருதான தாதாசாகேப் விருதை அறிவித்துள்ளது. தென்னகத்தில் இதற்கு முன்பாக கன்னட நடிகர் ராஜ்குமார், தெலுங்கு நடிகர் நாகேஷ்வரராவ், இயக்குனர் கே. விஸ்வநாத், தமிழகத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் ஆகிய வெகு சிலர் மட்டுமே இந்த உயரிய விருதை பெற்றுள்ளனர்.
ரஜினிகாந்திற்கு இந்த விருது அளித்தது அவருடைய ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. காலை முதல் சமூக வலைத்தளங்களில் ரஜினியை மக்கள் கொண்டாடி வருகின்றனர். ரஜினியின் ஆன்மீக அரசியல் மற்றும் மோடியின் திட்டங்களுக்கு ரஜினியின் ஆதரவு என்று ரஜினியின் சாப்ட் கார்னர் என்றைக்குமே பாஜகவிற்கு உண்டு. அந்த வகையில் தாதாசாகேப் பால்கே விருது வழப்பட்டிருப்பது ரஜினி ரசிகர்களுக்கு ஒரு பூஸ்ட் போல் அமைந்துள்ளது. இதனால் ரஜினி ரசிகர்களின் வாக்குகள் அனைத்தும் அதிமுக கூட்டணிக்கு வந்தடையும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே தாதாசாகேப் பல்கே விருதை வழங்கியதற்காக மத்திய அரசுக்கும் பிரதமர் மோடிக்கும் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். அதேபோல், வாழ்த்துக்களை தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.