Rajenthra Bhalaji Speech :
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களை பாதுகாக்க தமிழக காவல்துறையினர் போதும், துணை ராணுவப்படையை வரவழைக்க அவசியம் இல்லை என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டியளித்துள்ளார்.
காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க ஆந்திர மாநில ஆளுநர் நரசிம்மன், தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆகியோர் காஞ்சீபுரம் சென்று தரிசித்து வந்துள்ளனர்.
வரதராஜப்பெருமாள் திருக்கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் அத்திவரதர் வைபவம் வெகு விமர்சியாக தற்போது நடைபெற்று வருகின்றது.
இதை தொடர்ந்து ஆந்திர மாநில ஆளுநர் நரசிம்மன் வரதராஜப்பெருமாள் கோவிலுக்கு வருகை தந்து அத்திவரதரை தரிசித்தார்.
திருப்பதி தேவஸ்தான இயக்குனர் அனில்குமார் வஸ்தரங்கள், குடைகள், சந்தனம் ஆகியவற்றை அத்திவரதருக்கு அளித்து தரிசனம் செய்தார்.
இந்நிலையில் நேற்று அத்திவரதரை தரிசனம் செய்த பிறகு ‘அத்திவரதரின் இந்த வைபவத்திற்கு தமிழக காவல்துறையினர் முழுப்பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.
எனவே துணை ராணுவப்படையை வரவழைக்க அவசியம் இல்லை’ என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
மேலும் அதிகபட்சமாக 1 மணி நேரத்திலேயே அத்திவரதரை தரிசனம் செய்ய முடியும் எனவும், இங்குள்ள காவல்துறையினர் மற்றும் தேவஸ்தான பணியாளர்களும் மனித நேயத்தோடு நடந்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.
மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் உத்தரவிற்கு இணங்க காவல்துறையினர், தேவஸ்தான பணியாளர்கள், ஆட்சித்தலைவரின் மற்ற அதிகாரிகளும் சிறப்பாக செல்லப்பட்டு வரும் காரணத்தினால் துணை ராணுவப்படைக்கு எந்தவித அவசியமும் இல்லை எனவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தகவல் தெரிவித்துள்ளார்.