Super Star Mahesh Babu : பாகுபலியின் மூலம் வணிக ரீதியாக இந்திய சினிமாவுக்கான சந்தையை விரிவுப்படுத்தியது மட்டுமல்லாமல் பிரம்மாண்ட சினிமாவுக்கான புதுவரைமுறையை வகுத்தவர் ராஜமௌலி.
ஒவ்வொரு படத்திலும் தனக்கான எல்லையை விரித்துக்கொண்டே செல்லும் ராஜமௌலி, பாகுபலியில் அடைந்திருக்கும் உச்சம் பிரமிக்கத்தக்கது.
ஹாலிவுட் ஸ்டுடியோக்களுக்கே சவால்விடும் VFX காட்சிகளை முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்ப கலைஞர்களை வைத்து உருவாக்கியதன் மூலம் கூடுதலாக கவனம் பெற்றார் ராஜமௌலி.
இந்திய சினிமா என்றாலே இந்தி சினிமாதான் என உலகில் பிறமொழி ரசிகர்கள் நினைத்துக்கொண்டிருந்த வேளையில் தென்னக மொழியின் பெருமையாக உலகம் முழுக்க வசூல் வேட்டை நடத்தியது பாகுபலி.
அந்தவகையில் தென்னக மொழி படங்களுக்கான புகழை இந்திய அளவிலும் இந்திய மொழி படங்களுக்கான புகழை உலக அளவிலும் பரப்பியவர் ராஜமௌலி.
இப்படி பல பெருமைகளை கொண்ட ராஜமௌலி தற்போது ஆர்.ஆர்.ஆர் படத்தை இயக்கி வருகிறார்.
இதன் பிறகு அவர் இயக்கும் படத்தில் யார் ஹீரோ என்பதுதான் தற்போதைய கேள்வி. இதற்கு தற்போது விடையும் கிடைத்துள்ளது. தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் படத்தைதான் அடுத்து ராஜமௌலி இயக்கவுள்ளாராம்.