Rain for the next 4 days
Rain for the next 4 days

சென்னை: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் வரும் 18ம் தேதி வரை தமிழகம், தெலுங்கானா, ஆந்திரா, உள்கர்நாடக மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும் கணித்துள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறுகையில், ” வங்கக்கடலின் அதிக பகுதிகளில் அடுத்த 2 நாட்களில் தென்மேற்கு பருவ மழை விலக்கி கொள்ளப்படும்.

இதேபோன்று வடக்கு அரபிக்கடலில் தென்மேற்கு பருவ மழை, அடுத்த 2 நாட்களில் படிப்படியாக திரும்பப்பெறப்படும். இந்தியாவின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை படிப்படியாக விலகி வருகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் வரும் அக்டோபர் 17- ஆம் தேதி வடகிழக்கு பருவ மழை துவங்க சாதகமான சூழ்நிலை காணப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

மேலும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்றிரவு பரவலாக மழை பெய்துள்ளது குறிப்பிடதக்கது.

மேலும் கோயம்பேடு, வேளச்சேரி, ஆலந்தூர், கிண்டி, தியாகராயநகர், அசோக்நகர், மதுரவாயல், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று இரவு பரவலாக மழை பெய்துள்ளது.