PwD App of Election Commission – சேலம்: வரும் நாடாளுமன்ற தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க பி.டபிள்யூ.டி ஆப் மூலம் சிறப்பு ஏற்பாடு செய்ய தேர்தல் ஆணையம் செய்துள்ளது.
வரும் நாடாளுமன்றதேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் மும்முரமாக முன்னேற்பாடு பணிகளை செய்து வருகிறது.
இந்நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க முக்கியத்துவம் தரவுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
எனவே மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க பிரத்யேகமாக மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு உதவிடும் வகையில் பி.டபிள்யூ.டி., (PWD APP) செயலி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த செயலியை ஆன்ட்ராய்டு போனில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
அதன்மூலம் மாற்றுத்திறனாளிகள் தங்களது வாக்கு, எந்த பூத்தில் இருக்கிறது என்ற விவரத்தை அறிந்துகொள்ளலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றால், புதிதாக பெயரை சேர்த்துக் கொள்ளலாம்.
இதுபோன்ற பல சிறப்பம்சங்கள் இந்த ஆப்பில் உள்ளன., மேலும் வாக்குப்பதிவு நாளன்று தங்களுக்கு தேவையான உதவிகளை செய்திட முன்கூட்டியே கோரலாம்.
அடுமட்டுமின்றி, வாக்குச்சாவடிக்கு வந்தவுடன் தனக்கு வீல் சேர் வேண்டும் என தெரிவித்திருந்தால், அதற்கான ஏற்பாட்டை தேர்தல் ஆணையம் செய்துகொடுக்கிறது.
இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ‘வரும் நாடாளுமன்ற தேர்தலில் மாற்றுத்திறனாளிகள், தங்களது வாக்குகளை 100 சதவீதம் பதிவு செய்திட தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கிறோம்.
அவர்களுக்கு உதவிடும் வகையில் பி.டபிள்யூ.டி., ஆப் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
அதன்மூலம் தேவையான உதவிகளை மாற்றுத்திறனாளிகள் பெற முடியும்’ என கூறினார்.
மேலும் தேர்தலின் போது ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மாற்றுத்திறனாளிகள் செல்ல வசதியாக சாய்தளம், கண்பார்வையற்றோர் வாக்களிக்க பிரயில் ஸ்டிக்கர் ஒட்டுதல் போன்றவையும் செய்து கொடுக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.