Pranab Mukherjee Health Condition : நாட்டின் 13ஆவது குடியரசுத் தலைவராகபிரணாப் முகர்ஜி (2012-2017) இருந்தார். இவர் அண்மையில் தனக்கு கொரோன உறுதியாகியுள்ளது என்று ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
பின் சிகிச்சைக்காக நேற்று டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூளையில் கட்டி இருப்பது தெரியவந்து, அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய நிலையில் கொரோனா தொற்றும் உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாச கருவி மூலம் சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதையடுத்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மருத்துவமனைக்கு நேரில் சென்று, பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்துள்ளார்.
இதையடுத்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரணாப் முகர்ஜி விரைவில் குணமடைய வேண்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதேபோல், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜியுடன் தொடர்புகொண்டு அவரது உடல் நலம் குறித்து விசாரித்ததாக குடியரசுத்தலைவர் மாளிகையில் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி தனது சுட்டுரையில்: “முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.