Postal Exams 2019 :
சென்னை: தபால்துறை தேர்வுகளில் இனி இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே வினாத்தாள் வழங்கப்படும் என்ற மத்திய அரசு சுற்றறிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தபால்துறைகளில் உள்ள பல்வேறு பதவிகளுக்கான தேர்வு நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டு பணியிடங்களுக்கான ஆட்களை தேர்வு செய்யப்படுவது வழக்கம். இந்த தேர்வுகளுக்கான வினாத்தாள்களில் அந்தந்த மாநில மொழிகள் மற்றும் இந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளில் கேள்வி கேட்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு தபால் துறைகளுக்கான தேர்வு தமிழகத்தில் நடந்தது.
நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் வெளியீடு!
இந்த தேர்வில் அரியானா, பீகார் உள்ளிட்ட வடமாநில மாணவர்கள் தமிழ் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களை எடுத்து தேர்ச்சி பெற்றனர். இந்த சம்பவம் அனைவரிடத்திலும் மிகப்பெரிய அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
இதையடுத்து கடந்த 4 வருடங்களாக தபால் துறைகளுக்கான தேர்வுகள் நடத்தப்படாமல் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. இதனால், காலிபணியிடங்களை நிரப்பக்கோரி பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில், கிராமிய அஞ்சல் காலிபணியிடங்களுக்கான அறிவிப்பை தபால்துறை வெளியிட்டது. மேலும், ஏற்கனவே அமலில் உள்ள தேர்வு நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய குழுவின் அறிக்கையின்படி தமிழகத்திற்கு நிவாரணம் : பொன்.ராதாகிருஷ்ணன்
அதனை தொடர்ந்து, இனி தபால் துறை தேர்வுகளில் முதல் வினாத்தாள் இந்தி மற்றும் ஆங்கிலம் என இருமொழிகளில் மட்டுமே கேட்கப்படும் என்றும், அந்தந்த மாநில மொழிகள் அதில் இடம்பெறாது என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
மேலும் 2- ஆம் தாள் தேர்வு ஆங்கிலத்தில் இருந்து அந்தந்த மாநில மொழிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது மற்றும் 2- ஆம் தாளில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை என நாடு முழுவதும் உள்ள தலைமை அஞ்சலகங்களுக்கு மத்திய அரசு நேற்று முன்தினம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
இதன் மூலம் முதல்தாளை தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த தேர்வர்கள் அந்தந்த மாநில மொழிகளில் எழுத முடியாது. இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே எழுத முடியும்.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பாமக நிறுவனர் ராமதாஸ் கூறுகையில், அஞ்சல்துறை தேர்வுகளை தமிழில் எழுத முடியாது என அஞ்சல்துறை அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது.
இந்தஅறிவிப்பை ரத்து செய்யவேண்டும் என தெரிவித்துள்ளார். இவரை அடுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் கூறுகையில்,
அஞ்சல்துறைப் பணியிடங்களுக்கான தேர்வுகளை தமிழில் நடத்தவேண்டும், இல்லாவிடில் தமிழகம் மிகப்பெரிய போராட்டக்களமாக மாறும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இவ்வாறு பல அரசியல் கட்சி தலைவர்கள் இந்த அறிவிப்பிற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.