Pollachi Case
Pollachi Case

Pollachi Case – பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் 200க்கும் மேற்பட்ட பெண்களை காதல் வலையில் வீழ்த்தி ஆபாசபடம் எடுத்து மிரட்டி பணம் பறித்த விவகாரத்தில், விஐபிக்கள் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதால், வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி எம்.ஜி.ஆர் காலனியை சேர்ந்தவர் ரிஸ்வந்த் என்ற சபரிராஜன் (25). இவர் பேஸ்புக்கில், பொள்ளாச்சியை சேர்ந்த தனியார் கல்லூரியில் படிக்கும் 19 வயது மாணவியுடன் நட்பில் இருந்து வந்துள்ளார். கடந்த மாதம் 12 ஆம் தேதி உடுமலை ரோடு ஊஞ்சவேலாம்பட்டிக்கு அந்த மாணவியை அழைத்துள்ளார்.

மாணவி அங்கே வந்ததும், அவரை காரில் ஏற்றி, சிறிது தூரம் சென்ற பின் அங்கு நின்று கொண்டிருந்த தனது நண்பர்களான பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு (26), சதீஷ் (29), வசந்தகுமார் (29) ஆகியோரை ஏற்றினார்.

காரில் சபரிராஜன் மாணவியிடம் ஆடையை அகற்ற முயன்று அத்துமீறலில் ஈடுபட்டு, அதை செல்போனில் போட்டோ எடுத்துள்ளார்.

மேலும், மாணவியை தனது பண்ணை வீட்டிற்கு வர சொல்ல, மறுத்த மாணவியிடம் செல்போனில் இருக்கும் உனது போட்டோக்களை வெப்சைட்டில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியிடம் ஒரு பவுன் தங்க நகையை பறித்து அவரை காரில் இருந்து இறக்கி விட்டனர்.

பின்னர் அடிக்கடி மாணவியின் செல்போனில் தொடர்பு கொண்டு அவரிடம் பணம் கேட்டு மிரட்டி வந்தனர். இதனால் மாணவி கடந்த மாதம், பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் தெரிவித்தார்.

வழக்கை விசாரித்த போலீசார், சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோரை கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசை கடந்த 5ம் தேதி போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் திருநாவுக்கரசு, சபரிராஜன் கும்பலின் பல லீலைகள் சமூக வலைதளங்களில் தற்போது பரவி அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த 5 ஆண்டிற்கு மேலாக இவர்கள் 200க்கும் மேற்பட்ட மாணவிகள், இளம்பெண்களை கூட்டு சேர்ந்து நாசமாக்கியுள்ளனர் என்பது தெரியவந்தது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் இருந்து பறிமுதல் செய்த செல்போன்களில் அதிலிருந்த தடயங்களை அழித்து 4 வீடியோ மட்டுமே இருந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செல்போன்களில் இருந்த ஆளுங்கட்சியை சேர்ந்த முக்கிய அரசியல் பிரமுகர்களின் வாரிசுகள் இருந்திருக்கலாம் என்றும், பறிமுதல் செய்யப்பட்ட செல்போனிலிருந்த வீடியோக்களை போலீசார் அழித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இவ்வழக்கில் போலீசார் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று பல்வேறு சங்கங்களும், அரசியல் கட்சிகளும், மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி, வழக்கை சிபிஐக்கு மாற்றுவதற்கான அரசாணையை பிறப்பித்து, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அதற்கான கடிதத்தை அனுப்பி வைத்தார்.

வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதால், இந்த வழக்கில் தொடர்புடைய விஐபிக்கள் மற்றும் விஐபிக்களின் மகன்கள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.