Ramadoss PMK : பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கஜா புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளும், சேதங்களும் வரலாறு காணாதது.
பாதிக்கபட்ட மக்களுக்கு தற்சமயம் தேவை, ஆறுதலும், ஆதரவும் தான். புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய கூடும் என்று கூறி இருக்க வேண்டிய அமைச்சர்கள், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறியதால் தான் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
மேலும் மக்கள் போராட்டம் நடத்தி வரும் இடங்களில், சமாதானப்படுத்த வேண்டிய அமைச்சர்கள், தங்கள் அதிகார தோரணையை காட்டியதால் தான் மேலும் நிலைமை மோசமாகி உள்ளது.
இந்நிலையில் , முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மக்களின் கோபத்தை தணிக்கும் வகையில், பயிர்களுக்கான இழப்பீடு மற்றும் நிவாரண உதவிகளை அறிவித்திருந்தார்.
ஆனால், இது மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கவில்லை. முதல்வர் அளிப்பதாக கூறி இருக்கும் நிவாரண நிதி, சேதமடைந்த பயிர்களை நீக்கி, நிலத்தை சீரமைப்பதற்கு கூட போதாது.
மேலும் சேதம் அடைந்திருக்கும் குடிசைகள், படகுகள், மீன்வலைகள் உள்ளிட்ட எந்த பொருட்களுக்கும் அரசு வழங்கவிருக்கும் நிவாரண நிதி போதுமானது அல்ல.
இது மக்களின் கண்ணீரை துடைக்காது. மக்களின் உணர்வுகளை மதித்து அதற்கு ஏற்ப நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும்” இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.