Rajinikanth : 1978-ல் ஹீரோவாக அறிமுகமான ரஜினி 40 ஆண்டுகள் கடந்தும் தற்போதும் நம்பர் 1 நாயகனாக வலம்வருகிறார். இது உலகளவில் வேறெந்த நடிகரும் செய்யாத மகத்தான சாதனையானது.
கபாலியை தொடர்ந்து மீண்டும் காலாவில் ரஞ்சித்துடன் கூட்டணி அமைத்தார் ரஜினி.
கபாலி, காலா ஆகிய படங்கள் ரஜினிக்குள் இருந்த நடிகனை வெளிக்கொண்டு வந்ததாக ஒருசிலர் பாராட்டினாலும் பெரும்வாரியான ரசிகர்களுக்கு இந்த இரண்டு படங்களுமே முழு திருப்தியை கொடுக்கவில்லை.
ரஜினியை நாங்கள் மாஸ் ஹீரோவாக மட்டுமே பார்க்க விரும்புகிறோம் என ரசிகர்கள் வெளிப்படையாகவே விமர்சனத்தை முன்வைத்தார்கள்.
இந்த நிலையில்தான் பேட்ட திரைப்படம் அவர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக இந்த ஆண்டு பொங்கலன்று வெளியானது.
பொங்கல் விருந்தாக வெளியான ரஜினியின் பேட்ட படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தியது. ரஜினியின் படங்கள் பாக்ஸ் ஆபீஸில் வெற்றிபெறுவது இதுவொன்றும் புதிதல்ல.
ஆனால் பேட்ட படத்தின் வெற்றி அவர் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் வெற்றியாக அமைந்துள்ளது.
”எங்கள் ஆதர்ச நாயகன் மீண்டு வந்துவிட்டார்” என ரசிகர்கள் சமூக வலைதளங்களிலும் திரையரங்குகளிலும் கொண்டாடி தீர்த்தனர்.
கூடவே இப்படத்தின் முதல் காட்சியில் ரஜினி பேசும் ”வீழ்வேனென்று நினைத்தாயோ” எனும் வசனம் அவர் தன் எதிரிகளுக்கு சொன்னது போலவே இருந்தது.
இப்படி பல சிறப்புகளை கொண்ட பேட்ட படம் வெளியாகி இன்றுடன் 100-வது நாள். இதை அவர் ரசிகர்கள் விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள்.
கருப்பு வெள்ளை காலத்தில் களம் கண்ட ரஜினி ஈஸ்ட்மெண்ட் கலர், டிஜிட்டல், அனிமேஷன், 3டி என நான்கு வெவ்வேறு தொழில்நுட்பத்தில் நடித்துவிட்டார்.
இது இந்திய அளவில் வேறெந்த நடிகருக்கும் கிடைக்காத மிகப்பெரிய கௌரவம் ஆகும்.