OPS in Cyclone Gaja – “கஜா புயல் பாதிப்பை தேசிய பேரிடர் ஆக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
டெல்டா மாவட்டங்களில் புயல் பாதிப்பை குறித்து ஆய்வு செய்து வரும் துணை முதல்வர் பன்னீர்செல்வம், நேற்று கந்தர்வகோட்டை பகுதிகளில் ஆய்வு செய்யும்போது அங்குள்ள பொதுமக்கள் அனைவரும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அங்கிருந்தவர்களை சமாதானப்படுத்தி விட்டு பின்னர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கும் சென்று அங்கு புயல் சேதம் குறித்து ஆய்வு நடத்தினார்.
மேலும் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் புயலால் உயிரிழந்த குடும்பத்தின் 11 பேருக்கு தலா 10 லட்சம் காசோலைகளை வழங்கினார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “புயல் பாதித்த இடங்களில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் 2,3 நாட்களில் மீண்டும் அனைத்தும் சீரமைக்கப்படும்.
கஜா புயலால் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளதால் இதனை தேசிய பேரிடராக அறிவிக்க கோரி மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது.
விரைவில் தமிழக அரசு கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதியை தேசிய பேரிடர் பகுதியாக அறிவிக்கும் ” இவ்வாறு கூறினார்.