ஓஎம்ஆர் ஃபுட் கோர்ட்டில் புதிய கிளை என்ற பெயரில் சென்னையில் பல பேரிடம் மோசடி நடைபெற்றுள்ளது.
OMR Food Court Issue : சென்னையில் ஓஎம்ஆர் ரோட்டில் உள்ள ஓஎம்ஆர் ஃபுட் கோர்ட் செயல்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. இதன் புதிய கிளையை குரோம்பேட்டை மற்றும் திருவொற்றியூர் ஆகிய பகுதிகளில் தொடங்க இருப்பதாக கூறி சென்னையில் உள்ள பல பேரிடம் மோசடி நடைபெற்றுள்ளது. ஓஎம்ஆர் ஃபுட் கோர்ட் உரிமையாளர் ரஞ்சித் பாபா என்பவர் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
இந்த மோசடியில் தமிழ் சினிமா தயாரிப்பாளர்களில் ஒருவரான சிராஜ் அவர்களும் சிக்கியுள்ளார். திருவொற்றியூரில் புதிதாக கடை கட்டுவதாக கூறிய கும்பலை நம்பி கும்பகோணம் ஃபில்டர் காபி கடைக்காக ரூபாய் 3 லட்சம் முன்பணமாக அளித்துள்ளார். பணம் செலுத்தி பல மாதங்கள் ஆகியும் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் இருந்து எந்தவித பதில் கிடைக்காததாலும் அவர்களை தொடர்பு கொண்டு பணத்தை கேட்டபோது நஷ்டம் ஆகி விட்டதால் தற்போதைக்கு பணத்தை கொடுக்க முடியாது என பதில் கூறியுள்ளனர்.
இதனையடுத்து சிராஜ் அவர்கள் சென்னை காவல் ஆய்வாளரிடம் புகார் அளிக்க அவர்கள் துரைப்பாக்கம் ஜே9 போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்குமாறு கூறியுள்ளனர். அங்கு இவருக்கு முன்பாக 50 பேர் இதேபோல் புகார் அளித்திருப்பது தெரியவர இவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதனையடுத்து சம்பந்தப்பட்டவர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த மோசடியில் ஒரே கடைக்காக பலரிடம் பண மோசடி செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
அதேபோல் கடை கட்டுவதற்கான இடம் இதுதான் என கட்டப்பட்ட இடத்தின் உரிமையாளரும் தனக்கு வெறும் பத்தாயிரம் ரூபாய் மட்டுமே முன்பணமாக அளித்தனர். அதன்பிறகு எந்தவித பதிலும் இல்லை எனவே தானும் புகார் அளிக்கப் போவதாக கூறியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற இந்த பெரிய மோசடி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற சம்பவங்களில் இனி யாரும் சிக்கிக் கொள்ளக் கூடாது என தயாரிப்பாளர் சிராஜ் கூறியுள்ளார்.
மேலும் அவர் இதற்காக பணம் செலுத்திய விவரங்களையும் போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ள ஆவணங்களையும் வெளியிட்டுள்ளார்.